சினம் இன்மை
 
61. மதித்து இறப்பாரும் இறக்க! மதியார்,
மிதித்து இறப்பாரும் இறக்க! மிதித்து ஏறி,
ஈயும் தலைமேல் இருத்தலால், அஃது அறிவார்
காயும் கதம் இன்மை நன்று.
உரை
   
62. தண்டாச் சிறப்பின் தம் இன் உயிரைத் தாங்காது,
கண்டுழி எல்லாம் துறப்பவோ-மண்டி,
அடி பெயராது, ஆற்ற இளி வந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத்தவர்?
உரை
   
63. காவாது, ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல்
ஓவாதே தம்மைச் சுடுதலால், ஓவாதே
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார், எஞ் ஞான்றும்,
காய்ந்து அமைந்த சொல்லார், கறுத்து.
உரை
   
64. நேர்த்து, நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால்,
வேர்த்து வெகுளார், விழுமியோர்; ஓர்த்து அதனை,
உள்ளத்தான் உள்ளி, உரைத்து, உராய், ஊர் கேட்ப,
துள்ளி, தூண் முட்டுமாம், கீழ்.
உரை
   
65. இளையான் அடக்கம் அடக்கம்; கிளை பொருள்
இல்லான் கொடையே கொடைப் பயன்; எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்
பொறுக்கும் பொறையே பொறை.
உரை
   
66. கல் எறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல்
எல்லாரும் காணப் பொறுத்து, உய்ப்பர்-ஒல்லை,
இடு நீற்றால் பை அவிந்த நாகம்போல், தம்தம்
குடிமையான் வாதிக்கப்பட்டு.
உரை
   
67. மாற்றாராய் நின்று, தம் மாறு ஏற்பார்க்கு ஏலாமை,
'ஆற்றாமை' என்னார், அறிவுடையார்; ஆற்றாமை
நேர்த்து, இன்னா மற்று அவர் செய்தக்கால், தாம் அவரைப்
பேர்த்து இன்னா செய்யாமை நன்று.
உரை
   
68. நெடுங் காலம் ஓடினும், நீசர் வெகுளி
கெடும் காலம் இன்றிப் பரக்கும்; அடும் காலை
நீர் கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர் கொண்ட சான்றோர் சினம்.
உரை
   
69. உபகாரம் செய்ததனை ஓராதே, தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும், உபகாரம்
தாம் செய்வது அல்லால், தவற்றினால் தீங்கு ஊக்கல்
வான் தோய் குடிப் பிறந்தார்க்கு இல்.
உரை
   
70. கூர்த்து நாய் கௌவிக் கொளக் கண்டும், தம் வாயால்
பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை; நீர்த்து அன்றிக்
கீழ்மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால், சொல்பவோ,
மேன்மக்கள் தம் வாயால் மீட்டு?
உரை