மெய்ம்மை
 
111. இசையா ஒரு பொருள் இல் என்றல், யார்க்கும்
வசை அன்று; வையத்து இயற்கை; நசை அழுங்க
நின்று ஓடிப் பொய்த்தல்,-நிரைதொடீஇ!-செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து.
உரை
   
112. தக்காரும் தக்கவர் அல்லாரும், தம் நீர்மை
எக்காலும் குன்றல் இலர் ஆவர்;-அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம்; கைக்குமாம்,
தேவரே தின்னினும், வேம்பு.
உரை
   
113. கால் ஆடு போழ்தில், கழி கிளைஞர், வானத்து-
மேல் ஆடும் மீனின் பலர் ஆவர்; ஏலா
இடர் ஒருவர் உற்றக்கால்,-ஈர்ங் குன்ற நாட!-
'தொடர்பு உடையேம்' என்பார் சிலர்.
உரை
   
114. வடு இலா வையத்து, மன்னிய மூன்றில்,
நடுவணது எய்த, இரு தலையும் எய்தும்;
நடுவணது எய்தாதான் எய்தும், உலைப் பெய்து,
அடுவது போலும் துயர்.
உரை
   
115. நல் ஆவின் கன்றுஆயின், நாகும் விலை பெறூஉம்;
கல்லாரே ஆயினும், செல்வர் வாய்ச் சொல் செல்லும்.
புல் ஈரப் போழ்தின் உழவேபோல் மீது ஆடி,
செல்லாவாம், நல்கூர்ந்தார் சொல்.
உரை
   
116. இடம் பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்,
அடங்காதார் என்றும் அடங்கார்;-தடங் கண்ணாய்!-
உப்பொடு நெய், பால், தயிர், காயம், பெய்து அடினும்,
கைப்பு அறா, பேய்ச் சுரையின் காய்.
உரை
   
117. தம்மை இகழ்வாரைத் தாம் அவரின் முன் இகழ்க!
என்னை, அவரொடு பட்டது?-புன்னை
விறல் பூங் கமழ் கானல் வீங்கு நீர்ச் சேர்ப்ப!-
உறற்பால யார்க்கும் உறும்.
உரை
   
118. ஆ வேறு உருவின ஆயினும், ஆ பயந்த
பால் வேறு உருவின அல்லவாம்; பால்போல்
ஒருதன்மைத்து ஆகும் அறம்; நெறி, ஆபோல்,
உருவு பலகொளல், ஈங்கு.
உரை
   
119. யாஅர், உலகத்து ஓர் சொல் இல்லார்?-தேருங்கால்-
யாஅர், உபாயத்தின் வாழாதார்? யாஅர்,
இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர்,
கடைபோகச் செல்வம் உய்த்தார்?
உரை
   
120. தாம் செய் வினை அல்லால், தம்மொடு செல்வது மற்று
யாங்கணும் தேரின், பிறிது இல்லை; ஆங்குத் தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயன் இன்றே,
கூற்றம் கொண்டு ஓடும் பொழுது.
உரை