கல்வி
 
131. குஞ்சி அழகும், கொடுந் தானைக் கோட்டழகும்,
மஞ்சள் அழகும், அழகு அல்ல; நெஞ்சத்து,
'நல்லம் யாம்' என்னும் நடுவு நிலைமையால்,
கல்வி அழகே அழகு.
உரை
   
132. இம்மை பயக்குமால்; ஈயக் குறைவு இன்றால்;
தம்மை விளக்குமால்; தாம் உளராக் கேடு இன்றால்;-
எம்மை உலகத்தும் யாம் காணேம், கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
உரை
   
133. களர் நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்
விளை நிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;-
கடை நிலத்தோர் ஆயினும், கற்று அறிந்தோரைத்
தலை நிலத்து வைக்கப்படும்.
உரை
   
134. வைப்புழிக் கோட்படா; வாய்த்து ஈயின், கேடு இல்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின், வவ்வார்;
எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சை; மற்று அல்ல, பிற.
உரை
   
135. கல்வி கரை இல; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின், பிணி பல; தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்
பால் உண் குருகின் தெரிந்து.
உரை
   
136. தோணி இயக்குவான், தொல்லை வருணத்து,
காணின், கடைப்பட்டான் என்று இகழார்; காணாய்!
அவன் துணையா ஆறு போயற்றே, நூல் கற்ற
மகன் துணையா நல்ல கொளல்.
உரை
   
137. தவல் அருந் தொல் கேள்வித் தன்மை உடையார்,
இகல் இலர், எஃகு உடையார், தம்முள் குழீஇ,
நகலின் இனிதுஆயின், காண்பாம், அகல் வானத்து
உம்பர் உறைவார் பதி.
உரை
   
138. கனை கடல் தண் சேர்ப்ப! கற்று அறிந்தார் கேண்மை
நுனியின் கரும்பு தின்றற்றே; நுனி நீக்கித்
தூரின் தின்றன்ன தகைத்துஅரோ, பண்பு இலா
ஈரம் இலாளர் தொடர்பு.
உரை
   
139. கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்,
நல்லறிவு நாளும் தலைப்படுவர்-தொல் சிறப்பின்
ஒள் நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு.
உரை
   
140. அலகு சால் கற்பின், அறிவன் நூல் கல்லாது,
உலக நூல் ஓதுவது எல்லாம், கலகல
கூஉம் துணைஅல்லால், கொண்டு, தடுமாற்றம்
போஒம் துணை அறிவார் இல்.
உரை