நல்லினம் சேர்தல்
 
171. அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி,
நெறியல்ல செய்து ஒழுகியவ்வும், நெறி அறிந்த
நற் சார்வு சார, கெடுமே-வெயில் முறுகப்
புற் பனிப் பற்று விட்டாங்கு.
உரை
   
172. அறிமின், அற நெறி; அஞ்சுமின், கூற்றம்;
பொறுமின், பிறர் கடுஞ் சொல்; போற்றுமின், வஞ்சம்;
வெறுமின், வினை தீயார் கேண்மை; எஞ் ஞான்றும்
பெறுமின், பெரியார் வாய்ச் சொல்.
உரை
   
173. அடைந்தார்ப் பிரிவும், அரும் பிணியும், கேடும்,
உடங்கு, உடம்பு கொண்டார்க்கு உறலால், தொடங்கி,
'பிறப்பு இன்னாது' என்று உணரும் பேர் அறிவினாரை
உறப் புணர்க, அம்மா, என் நெஞ்சு!
உரை
   
174. இறப்ப நினையுங்கால், இன்னாது எனினும்,
பிறப்பினை யாரும் முனியார்-பிறப்பினுள்
பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்கெளாடு எஞ்ஞான்றும்
நண்பு ஆற்றி நட்கப் பெறின்.
உரை
   
175. ஊர் அங்கண நீர் உரவு நீர்ச் சேர்ந்தக்கால்,
பேரும் பிறிது ஆகி, தீர்த்தம் ஆம்;-ஓரும்
குல மாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர்,
நல மாட்சி நல்லாரைச் சார்ந்து.
உரை
   
176. ஒண் கதிர் வாள் மதியம் சேர்தலால், ஓங்கிய
அம் கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்;-
குன்றிய சீர்மையர் ஆயினும், சீர் பெறுவர்,
குன்று அன்னார் கேண்மை கொளின்.
உரை
   
177. பாலோடு அளாய நீர் பால் ஆகும் அல்லது,
நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம்;-தேரின்,
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து.
உரை
   
178. கொல்லை இரும் புனத்துக் குற்றி அடைந்த புல்
ஒல்காவே ஆகும், உழவர் உழுபடைக்கு;-
மெல்லியரேஆயினும், நற் சார்வு சார்ந்தார்மேல்,
செல்லாவாம், செற்றார் சினம்.
உரை
   
179. நில நலத்தால் நந்திய நெல்லேபோல், தம்தம்
குல நலத்தால் ஆகுவர், சான்றோர்; கல நலத்தைத்
தீ வளி சென்று சிதைத்தாங்கு, சான்றாண்மை
தீஇனம் சேரக் கெடும்.
உரை
   
180. மனத்தால் மறு இலரேனும், தாம் சேர்ந்த
இனத்தால் இகழப்படுவர்;-புனத்து
வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறி புனம் தீப்பட்டக்கால்.
உரை