நட்பாராய்தல்
 
211. கருத்து உணர்ந்து கற்று அறிந்தார் கேண்மை, எஞ் ஞான்றும்,
குருத்தின் கரும்பு தின்றற்றே; குருத்திற்கு
எதிர் செலத் தின்றன்ன தகைத்துஅரோ, என்றும்
மதுரம் இலாளர் தொடர்பு.
உரை
   
212. இற் பிறப்பு எண்ணி, இடை திரியார் என்பது ஓர்
நல் புடை கொண்டமை அல்லது,-பொன் கேழ்
புனல் ஒழுகப் புள் இரியும் பூங் குன்ற நாட!-
மனம் அறியப்பட்டது ஒன்று அன்று.
உரை
   
213. யானை அனையவர் நண்பு ஒரீஇ, நாய் அனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;-யானை
அறிந்து அறிந்தும், பாகனையே கொல்லும்; எறிந்த வேல்
மெய்யதா, வால் குழைக்கும், நாய்.
உரை
   
214. பல நாளும் பக்கத்தார் ஆயினும், நெஞ்சில்
சில நாளும் ஒட்டாரோடு ஒட்டார்; பல நாளும்
நீத்தார் என, கைவிடல் உண்டோ-தம் நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு?
உரை
   
215. கோட்டுப்பூப் போல மலர்ந்து, பின் கூம்பாது,
வேட்டதே வேட்டது ஆம் நட்பு ஆட்சி; தோட்ட
கயப்பூப்போல் முன் மலர்ந்து, பின் கூம்புவாரை
நயப்பாரும் நட்பாரும் இல்.
உரை
   
216. கடையாயார் நட்பில் கமுகு அனையர்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; தலையாயார்
எண்ண அரும் பெண்ணை போன்று, இட்ட ஞான்று இட்டதே,
தொன்மை உடையார் தொடர்பு.
உரை
   
217. கழுநீருள் கார் அடகேனும், ஒருவன்
விழுமிதாக் கொள்ளின் அமிழ்து ஆம்; விழுமிய
குய்த் துவை ஆர் வெண் சோறே ஆயினும், மேவாதார்
கைத்துண்டல் காஞ்சிரங்காய்.
உரை
   
218. நாய்க் கால் சிறு விரல்போல் நன்கு அணியர் ஆயினும்,
ஈக் கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய் விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.
உரை
   
219. தெளிவு இலார் நட்பின் பகை நன்று; சாதல்
விளியா அரு நோயின் நன்றால்; அளிய
இகழ்தலின் கோறல் இனிதே; மற்று இல்ல
புகழ்தலின் வைதலே நன்று.
உரை
   
220. மரீஇ, பலரொடு பல் நாள் முயங்கி,
பொரீஇ, பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்;
பரீஇ, உயிர் செகுக்கும் பாம்பொடும் இன்னா,
மரீஇ,இப், பின்னைப் பிரிவு.
உரை