தொடக்கம் | ||
கூடா நட்பு
|
||
231. | செறிப்பு இல் பழங் கூரைச் சேறு அணை ஆக இறைத்தும், நீர் ஏற்றும், கிடப்பர்,-கறைக் குன்றம் பொங்கு அருவி தாழும் புனல் வரை நல் நாட!- தம் கருமம் முற்றும் துணை. |
உரை |
232. | சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்று ஆய், மாரிபோல் மாண்ட பயத்தது ஆம்; மாரி வறந்தக்கால் போலுமே,-வால் அருவி நாட!- சிறந்தக்கால் சீர் இலார் நட்பு. |
உரை |
233. | நுண் உணர்வினாரொடு கூடி நுகர்வு உடைமை விண்ணுலகே ஒக்கும் விழைவிற்றால்; நுண் நூல் உணர்வு இலர் ஆகிய ஊதியம் இல்லார்ப் புணர்தல் நிரயத்துள் ஒன்று. |
உரை |
234. | பெருகுவது போலத் தோன்றி, வைத் தீப்போல் ஒருபொழுதும் செல்லாதே நந்தும்,-அருகு எல்லாம் சந்தன நீள் சோலைச் சாரல் மலை நாட! பந்தம் இலாளர் தொடர்பு. |
உரை |
235. | ‘செய்யாத செய்தும் நாம்’ என்றலும், செய்வதனைச் செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும், மெய்யாக இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும், அந் நிலையே துன்புறூஉம் பெற்றி தரும். |
உரை |
236. | ஒரு நீர்ப் பிறந்து, ஒருங்கு நீண்டக்கடைத்தும், விரி நீர்க் குவளையை ஆம்பல் ஒக்கல்லா;- பெரு நீரார் கேண்மை கொளினும், நீர் அல்லார் கருமங்கள் வேறுபடும். |
உரை |
237. | முற்றல் சிறு மந்தி முற்பட்ட தந்தையை நெற்றுக் கண்டன்ன விரலால் ஞெமிர்த்திட்டுக் குற்றிப் பறிக்கும் மலை நாட! இன்னாதே, ஒற்றுமை கொள்ளாதார் நட்பு. |
உரை |
238. | முட்டு உற்ற போழ்தில் முடுகி, என் ஆர் உயிரை நட்டான் ஒருவன் கை நீட்டேனேல், நட்டான் கடி மனை கட்டு அழித்தான் செல்வுழிச் செல்க! நெடுமொழி வையம் நக! |
உரை |
239. | ஆன் படுநெய் பெய் கலனுள் அது களைந்து, வேம்பு அடு நெய் பெய்தனைத்துஅரோ-தேம் படு நல் வரை நாட!-நயம் உணர்வார் நண்பு ஒரீஇ, புல்லறிவினாரொடு நட்பு. |
உரை |
240. | உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை இன்மை, பருகற்கு அமைந்தபால் நீர் அளாயற்றே; தெரிவு உடையார் தீஇனத்தர் ஆகுதல், நாகம் விரி பெடையோடு ஆடி, விட்டற்று. |
உரை |