அறிவுடைமை
 
241. பகைவர் பணிவு இடம் நோக்கி, தகவு உடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார்;-காணாய்;
இளம் பிறை ஆயக்கால் திங்களைச் சேராது,
அணங்கு அருந் துப்பின் அரா.
உரை
   
242. நளி கடல் தண் சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு
அணிகலம் ஆவது அடக்கம்; பணிவு இல் சீர்
மாத்திரை இன்றி நடக்குமேல், வாழும் ஊர்
கோத்திரம் கூறப்படும்.
உரை
   
243. எந் நிலத்து வித்து இடினும், காஞ்சிரங் காழ் தெங்கு ஆகா;
தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால்,
தன்னால்தான் ஆகும் மறுமை; வட திசையும்,
கொன்னாளர் சாலப் பலர்.
உரை
   
244. வேம்பின் இலையுள் கனியினும், வாழை தன்
தீம் சுவை யாதும் திரியாதாம்; ஆங்கே,
இனம் தீது எனினும், இயல்பு உடையார் கேண்மை
மனம் தீது ஆம் பக்கம் அரிது.
உரை
   
245. கடல் சார்ந்தும் இன் நீர் பிறக்கும்; மலை சார்ந்தும்
உப்பு ஈண்டு உவரி பிறத்தலால், தம்தம்
இனத்து அனையர் அல்லர்-எறி கடல் தண் சேர்ப்ப!-
மனத்து அனையர், மக்கள் என்பார்.
உரை
   
246. பராஅரைப் புன்னை படு கடல் தண் சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ, நல்ல
மரூஉச் செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார்?
விராஅஅய்ச் செய்யாமை நன்று.
உரை
   
247. உணர உணரும் உணர்வு உடையாரைப்
புணர, புணருமாம் இன்பம்; புணரின்
தெரியத் தெரியும் தெரிவு இலாதாரைப்
பிரிய, பிரியுமாம் நோய்.
உரை
   
248. நல் நிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலை கலக்கிக் கீழ் இடுவானும், நிலையினும்
மேல்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும், தான்.
உரை
   
249. கரும வரிசையால், கல்லாதார் பின்னும்
பெருமை உடையாரும் சேறல்,-அரு மரபின்
ஓதம் அரற்றும் ஒலி கடல் தண் சேர்ப்ப!-
பேதைமை அன்று; அது அறிவு.
உரை
   
250. கருமமும் உள்படா, போகமும் துவ்வா,
தருமமும் தக்கார்க்கே செய்யா, ஒருநிலையே
முட்டு இன்றி மூன்றும் முடியுமேல், அஃது என்ப,
‘பட்டினம் பெற்ற கலம்.’
உரை