ஈயாமை
 
271. நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உள வரையால்
அட்டது பாத்து உண்டல், அட்டு உண்டல்; அட்டது
அடைத்து இருந்து உண்டு ஒழுகும் ஆவது இல் மாக்கட்கு
அடைத்தவாம், ஆண்டைக் கதவு.
உரை
   
272. எத்துணையானும், இயைந்த அளவினால்,
சிற்றறம் செய்தார் தலைப்படுவர்; மற்றைப்
பெருஞ் செல்வம் எய்தியக்கால், ‘பின் அறிதும்!’ என்பார்
அழிந்தார், பழி கடலத்துள்.
உரை
   
273. துய்த்துக் கழியான், துறவோர்க்கு ஒன்று ஈகலான்,
வைத்துக் கழியும் மடவோனை,-வைத்த
பொருளும் அவனை நகுமே; உலகத்து
அருளும் அவனை நகும்.
உரை
   
274. கொடுத்தலும், துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ் செல்வம், இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போல, பருவத்தால்,
ஏதிலான் துய்க்கப்படும்.
உரை
   
275. எறி நீர்ப் பெருங் கடல் எய்தி இருந்தும்,
அறு நீர்ச் சிறு கிணற்று ஊறல் பார்த்து உண்பர்;
மறுமை அறியாதார் ஆக்கத்தின், சான்றோர்
கழி நல்குரவே தலை.
உரை
   
276. ‘எனது எனது’ என்று இருக்கும் ஏழை பொருளை,
‘எனது எனது’ என்று இருப்பன், யானும்; தனது ஆயின்,
தானும் அதனை வழங்கான்; பயன் துவ்வான்;
யானும் அதனை அது.
உரை
   
277. வழங்காத செல்வரின், நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தார் எனப்படுதல் உய்ந்தார்; உழந்து அதனைக்
காப்பு உய்ந்தார்; கல்லுதலும் உய்ந்தார்; தம் கைந் நோவ
யாப்பு உய்ந்தார்; உய்ந்த பல.
உரை
   
278. தனது ஆகத் தான் கொடான்; தாயத்தவரும்
தமது ஆய போழ்தே கொடாஅர்; தனது ஆக
முன்னே கொடுப்பின், அவர் கடியார்; தான் கடியான்,
பின்னை அவர் கொடுக்கும் போழ்து.
உரை
   
279. இரவலர் கன்று ஆக, ஈவார் ஆ ஆக,
விரகின் சுரப்பதாம், வண்மை; விரகு இன்றி
வல்லவர் ஊன்ற வடி ஆபோல், வாய் வைத்துக்
கொல்லச் சுரப்பதாம், கீழ்.
உரை
   
280. ஈட்டலும் துன்பம்; மற்று ஈட்டிய ஒண் பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந் துன்பம்; காத்த
குறைபடின், துன்பம்; கெடின், துன்பம்; துன்பக்கு
உறைபதி, மற்றைப் பொருள்.
உரை