இரவச்சம்
 
301. ‘நம்மாலே ஆவர், இந் நல்கூர்ந்தார்; எஞ் ஞான்றும்
தம்மால் ஆம் ஆக்கம் இலர்’ என்று, தம்மை
மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
தெருண்ட அறிவினவர்?
உரை
   
302. இழித்தக்க செய்து ஒருவன் ஆர உணலின்,
பழித்தக்க செய்யான், பசித்தல் தவறோ?-
விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ, ஒருவன்
அழித்துப் பிறக்கும் பிறப்பு?
உரை
   
303. இல்லாமை கந்தா இரவு துணிந்து, ஒருவர்
செல்லாரும் அல்லர், சிறு நெறி; புல்லா,
‘அகம் புகுமின்; உண்ணுமின்’ என்பவர்மாட்டு அல்லால்,
முகம்புகுதல் ஆற்றுமோ, மேல்?
உரை
   
304. திருத் தன்னை நீப்பினும், தெய்வம் செறினும்,
உருத்த மனத்தோடு உயர்வு உள்ளின் அல்லால்,
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின் சென்று,
எருத்து இறைஞ்சி நில்லாதாம், மேல்.
உரை
   
305. கரவாத திண் அன்பின் கண் அன்னார்கண்ணும்
இரவாது வாழ்வது ஆம் வாழ்க்கை; இரவினை
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால்; என்கொலோ,
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு?
உரை
   
306. ‘இன்னா இயைக, இனிய ஒழிக’ என்று
தன்னையே தான் இரப்பத் தீர்வதற்கு, என்னைகொல்,
காதல் கவற்றும் மனத்தினால் கண் பாழ்பட்டு
ஏதிலவரை இரவு?
உரை
   
307. என்றும் புதியார் பிறப்பினும், இவ் உலகத்து,
என்றும் அவனே பிறக்கலான்-குன்றின்
பரப்பு எலாம் பொன் ஒழுகும் பாய் அருவி நாட!-
இரப்பாரை எள்ளா மகன்.
உரை
   
308. புறத்துத் தன் இன்மை நலிய, அகத்துத் தன்
நல் ஞானம் நீக்கி நிறீஇ, ஒருவனை,
‘ஈயாய்’ எனக்கு!’ என்று இரப்பானேல், அந் நிலையே
மாயானோ, மாற்றிவிடின்?
உரை
   
309. ஒருவர் ஒருவரைச் சார்ந்து ஒழுகல் ஆற்றி,
வழிபடுதல் வல்லுதல் அல்லால், பரிசு அழிந்து,
‘செய்யீரோ, என்னானும்!’ என்னும் சொற்கு இன்னாதே,
பையத் தாம் செல்லும் நெறி?
உரை
   
310. பழமை கந்தாகப் பசைந்த வழியே
கிழமைதான் யாதானும் செய்க! கிழமை
பொறாஅர் அவர் என்னின், பொத்தி, தம் நெஞ்சத்து
அறாஅச் சுடுவது ஓர் தீ.
உரை