பொதுமகளிர்
 
371. விளக்கு ஒளியும், வேசையர் நட்பும், இரண்டும்,
துளக்கு அற நாடின், வேறு அல்ல;-விளக்கு ஒளியும்
நெய் அற்றகண்ணே அறுமே; அவர் அன்பும்
கை அற்றகண்ணே அறும்.
உரை
   
372. அம் கோட்டு அகல் அல்குல் ஆய் இழையாள், நம்மொடு,
‘செங்கோடு பாய்துமே’ என்றாள்மன்; செங் கோட்டின்-
மேல் காணம் இன்மையால் மேவாது ஒழிந்தாளே,
கால் கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.
உரை
   
373. அம் கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செங் கண் மால் ஆயினும் ஆகமன்! தம் கைக்
கொடுப்பது ஒன்று இல்லாரை, கொய் தளிர் அன்னார்,
விடுப்பர், தம் கையால் தொழுது.
உரை
   
374. ஆணம் இல் நெஞ்சத்து அணி நீலக் கண்ணார்க்குக்
காணம் இல்லாதார் கடு அனையர்;-காணவே-
செக்கு ஊர்ந்து கொண்டானும் செய்த பொருள் உடையார்
அக்காரம் அன்னார், அவர்க்கு.
உரை
   
375. பாம்பிற்கு ஒரு தலை காட்டி, ஒரு தலை
தேம் படு தெண் கயத்து மீன் காட்டும் ஆங்கு
மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வர்,
விலங்கு அன்ன வெள்ளறிவினார்.
உரை
   
376. ‘பொத்த நூல் கல்லும், புணர் பிரியா அன்றிலும்போல்,
நித்தலும் நம்மைப் பிரியலம்’ என்று உரைத்த
பொற்றொடியும் போர்த் தகர்க் கோடு ஆயினாள்; நல் நெஞ்சே!
நிற்றியோ, போதியோ, நீ?
உரை
   
377. ஆமாபோல் நக்கி, அவர் கைப் பொருள் கொண்டு,
சேமாப்போல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
ஏமாந்து, எமது என்று இருந்தார் பெறுபவே,
தாமாம் பலரால் நகை.
உரை
   
378. ஏமாந்த போழ்தின் இனியார் போன்று, இன்னாராய்த்
தாம் ஆர்ந்த போதே தகர்க்கோடு ஆம், மான் நோக்கின்,
தம் நெறிப் பெண்டிர் தட முலை சேராரே-
‘செந் நெறிச் சேர்தும்’ என்பார்.
உரை
   
379. ஊறு செய் நெஞ்சம் தம் உள் அடக்கி, ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழி கேட்டு, தேறி,
‘எமர்’ என்று கொள்வாரும் கொள்பவே; யார்க்கும்
தமர் அல்லர்; தம் உடம்பினார்.
உரை
   
380. உள்ளம் ஒருவன் உழையதா, ஒண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்து எல்லாம் தெள்ளி
அறிந்த இடத்தும், அறியாராம்-பாவம்
செறிந்த உடம்பினவர்.
உரை