151. வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம்,-தழங்கு அருவி
வேய் முற்றி முத்து உதிரும் வெற்ப!-அது அன்றோ,
நாய் பெற்ற தெங்கம்பழம்.
உரை
   
152. ஆவிற்கு அரும் பனி தாங்கிய மாலையும்,
‘கோவிற்குக் கோவலன்’ என்று, உலகம் கூறுமால்;
தேவர்க்கு, மக்கட்கு, என வேண்டா;-தீங்கு உரைக்கும்
நாவிற்கு நல்குரவு இல்.
உரை
   
153. பூந்தண் புனல் புகார்ப் பூமி குறி காண்டற்கு
வேந்தன் வினாயினான், மாந்தரை; சான்றவன்,
கொண்டதனை நாணி, மறைத்தலால்,-தன் கண்ணின்
கண்டதூஉம் எண்ணிச் சொலல்!
உரை
   
154. இஞ்சி அடைத்துவைத்து, ஏமாந்து இருப்பினும்,
அஞ்சி அகப்படுவர், ஆற்றாதார்;-அஞ்சி
இருள் புக்கு இருப்பினும், மெய்யே வெரூஉம், புள்
இருளின் இருந்தும் வெளி.
உரை
   
155. ஆற்ற வினை செய்தார் நிற்ப, பல உரைத்து,
ஆற்றாதார் வேந்தனை நோவது-சேற்றுள்
வழாஅமைக் காத்து ஓம்பி வாங்கும் எருத்தும்
எழாஅமைச் சாகாடு எழல்.
உரை
   
156. தன் நலிகிற்பான் தலை வரின், தான் அவற்குப்
பின், நலிவானைப் பெறல் வேண்டும்-என்னதூஉம்
வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே,
நாய் பின்னதாகத் தகர்.
உரை
   
157. வலியாரைக் கண்டக்கால் வாய் வாளார் ஆகி,
மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை,-
புலி கலாம் கொள் யானைப் பூங் குன்ற நாட!-
வலி அலாம் தாக்கு வலிது.
உரை
   
158. ‘மறுமை ஒன்று உண்டோ? மனப் பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின்’ என்பாரே-நறு நெய்யுள்
கட்டி அடையைக் களைவித்து, கண் செரீஇ,
இட்டிகை தீற்றுபவர்.
உரை
   
159. அறம் செய்பவற்கும், அறவுழி நோக்கி,
திறம் தெரிந்து செய்தக்கால், செல்வுழி நன்று ஆம்;-
புறம் செய்ய, செல்வம் பெருகும்; அறம் செய்ய,
அல்லவை நீங்கிவிடும்.
உரை
   
160. வருவாய் சிறிதுஎனினும், வைகலும் ஈண்டின்,
பெரு வாய்த்தா நிற்கும், பெரிதும்;-ஒருவாறு
ஒளி ஈண்டி நின்றால், உலகம் விளக்கும்;
துளி ஈண்டில், வெள்ளம் தரும்.
உரை