ஐந்திணை ஐம்பது
(மாறன் பொறையனார்)
1. முல்லை
தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது
1. மல்லர்க் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து,
செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி,-நல்லாய்!-
இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப, ஈதோ
மயங்கி வலன் ஏரும், கார்!
உரை
   
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
2. அணி நிற மஞ்ஞை அகவ, இரங்கி,
மணி நிற மா மலைமேல் தாழ்ந்து,-பணிமொழி!-
கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும்,
பீர் நீர்மை கொண்டன, தோள்.
உரை
   
பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது
3. மின்னும், முழக்கும், இடியும் மற்று இன்ன
கொலைப் படை சாலப் பரப்பிய,-முல்லை
முகை வென்ற பல்லினாய்!-இல்லையோ, மற்று
நமர் சென்ற நாட்டுள் இக் கார்?
உரை
   
4. உள்ளார்கொல் காதலர்-ஒண்தொடி!-நம் திறம்?
வள் வார் முரசின் குரல்போல் இடித்து உரறி,
நல்லார் மனம் கவரத் தோன்றி, பணிமொழியைக்
கொல்வாங்குக் கூர்ந்தது, இக் கார்.
உரை
   
5. கோடு உயர் தோற்ற மலைமேல் இருங் கொண்மூக்
கூடி நிரந்து தலை பிணங்கி, ஓடி,
வளி கலந்து, வந்து உறைக்கும் வானம் காண்தோறும்,
துளி கலந்து வீழ்தரும், கண்.
உரை
   
6. முல்லை நறு மலர் ஊதி, இருந் தும்பி
செல்சார்வு உடையார்க்கு இனியவாய்,-நல்லாய்!-மற்று
யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை
ஈரும், இருள் மாலை வந்து.
உரை
   
7. தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை
ஊர் ஆன்பின் ஆயன் உவந்து ஊதும், சீர்சால்,
சிறு குழல் ஓசை,-செறிதொடி!-வேல் கொண்டு
எறிவது போலும் எனக்கு.
உரை
   
8. பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,
பொருந்தினர் மேனிபோல், பொற்ப,-திருந்திழாய்!-
வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
கானம் கடந்து சென்றார்?
உரை
   
'பருவம்' என்று அழிந்த கிழத்தியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது
9. வருவர்-வயங்கிழாய்!-வாள் ஒண் கண் நீர் கொண்டு,
உருகி, உடன்று அழிய வேண்டா; தெரிதியேல்,
பைங் கொடி முல்லை அவிழ் அரும்பு ஈன்றன,
வம்ப மழை உரறக் கேட்டு.
உரை
   
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது
10. நூல் நவின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக!
தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி, தான் நவின்ற
கற்புத் தாள் வீழ்த்து, கவுள் மிசைக் கை ஊன்றி,
நிற்பாள் நிலை உணர்கம் யாம்.
உரை