3. மருதம்
பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
21. கொண்டுழிப் பண்டம் விலை ஒரீஇக் கொற்சேரி
நுண் துளைத் துன்னூசி விற்பாரின், ஒன்றானும்
வேறு அல்லை,-பாண!-வியல் ஊரன் வாய்மொழியைத்
தேற, எமக்கு உரைப்பாய், நீ.
உரை
   
22. போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண் மகனே! நீ தான்
அறிவு அயர்ந்து, எம் இல்லுள் என் செய்ய வந்தாய்?
நெறி அதுகாண், எங்கையர் இற்கு.
உரை
   
23. யாணர் அகல் வயல் ஊரன் அருளுதல்,-
பாண!-பரிந்து உரைக்க வேண்டுமோ? மாண
அறிவது அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று?
உரை
   
24. கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம்,
சார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம்
காரத்தின் வெய்ய, என் தோள்!
உரை
   
வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது
25. அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன்
விழைதகு மார்பம் உறும், நோய்-விழையின்,
குழலும் குடுமி என் பாலகன் கூறும்
மழலை வாய்க் கட்டுரையால்.
உரை
   
புதல்வனை முனிந்து, தலைமகள் மறுத்தாளைப் போல, தோழிக்கு வாயில் நேர்ந்தது
26. பெய் வளைக் கையாய்! பெரு நகை ஆகின்றே-
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப,
கை புனை தேர் ஏறிச் செல்வானைச் சென்று இவன்
எய்தி, இடர் உற்றவாறு!
உரை
   
வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது
27. தண் வயல் ஊரற் புலக்கும் தகையமோ?-
நுண் அறல் போல நுணங்கிய ஐங் கூந்தல்,
வெண் மரல் போல நிறம் திரிந்து, வேறாய
வண்ணம் உடையேம், மற்று யாம்.
உரை
   
தலைமகள் தோழிக்கு வாயில் மறுத்தது
28. ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு
வல்லென்றது என் நெஞ்சம்-வாள்கண்ணாய்!-'நில்' என்னாது,
ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப, என்னானும்
நோக்கான், தேர் ஊர்ந்தது கண்டு.
உரை
   
ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன் புணர்ந்து நீங்கிய பின்பு,
சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது
29. ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பம்
புல்லேன் யான்’ என்பேன்;-புனையிழையாய்!-புல்லேன்
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ, ஊரன்-
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்?
உரை
   
30. குளிரும் பருவத்தேஆயினும், தென்றல்
வளி எறியின், மெய்யிற்கு இனிதாம்;-ஒளியிழாய்!-
ஊடி இருப்பினும், ஊரன் நறு மேனி
கூடல் இனிது ஆம், எனக்கு.
உரை