4. பாலை
பருவம் கண்டு அழிந்த தலைமகள், தோழிக்குச் சொல்லியது
31. உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்,
எதிரி முருக்கு அரும்ப, ஈர்ந் தண் கார் நீங்க, எதிருநர்க்கு
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்,
துன்பம் கலந்து அழியும், நெஞ்சு.
உரை
   
தலைமகனது பிரிவுக் குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது
32. விலங்கல்; விளங்கிழாய்! செல்வாரோ அல்லர்
அழல் பட்டு அசைந்த பிடியை, எழில் களிறு,
கல் சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையால் கொண்டு,
உச்சி ஒழுக்கும் சுரம்.
உரை
   
மகள் போக்கிய நற்றாய் கவன்று சொல்லியது
33. பாவையும், பந்தும், பவளவாய்ப் பைங் கிளியும்,
ஆயமும், ஒன்றும், இவை நினையாள்; பால் போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல், காதலன்பின்,
காய்ந்து கதிர் தெறூஉம் காடு?
உரை
   
தோழி, தலைமகனைச் செலவு அழுங்கியது
34. கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர்
ஆட்டிவிட்டு ஆறு அலைக்கும் அத்தம் பல நீந்தி,
வேட்ட முனைவயின் சேறிரோ-ஐய!-நீர்
வாள் தடங் கண் மாதரை நீத்து?
உரை
   
தலைமகன் பொருள்வயின் பிரிந்த காலத்து ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்குத்
தலைமகள், 'ஆற்றுவல்' என்பதுபட மொழிந்தது
35. கொடு வில் எயினர் தம் கொல் படையால் வீழ்த்த
தடி நிணம் மாந்திய பேஎய், நடுகல்
விரி நிழல், கண்படுக்கும் வெங் கானம் என்பர்,
பொருள் புரிந்தார் போய சுரம்.
உரை
   
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது
36. கடிது ஓடும் வெண்தேரை, ‘நீர் ஆம்’ என்று எண்ணி,
பிடியோடு ஒருங்கு ஓடி, தாள் பிணங்கி, வீழும்
வெடி ஓடும் வெங் கானம் சேர்வார்கொல்,-நல்லாய்!-
தொடி ஓடி வீழத் துறந்து?
உரை
   
உடன் போய தலைமகட்கு, நற்றாய் கவன்று உரைத்தது
37. தோழியர் சூழத் துறை முன்றில் ஆடுங்கால்,
வீழ்பவள் போலத் தளரும் கால், தாழாது,
கல் அதர் அத்தத்தைக் காதலன்பின் போதல்
வல்லவோ, மாதர் நடை?
உரை
   
பிரிவின்கண் ஆற்றாளாயின தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது
38. சுனை வாய்ச் சிறு நீரை, ‘எய்தாது’ என்று எண்ணி,
பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமா தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி.
உரை
   
தலைமகன் பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது
39. மடவைகாண்;-நல் நெஞ்சே!-மாண் பொருள்மாட்டு ஓட,
புடைபெயர் போழ்தத்தும் ஆற்றாள், படர் கூர்ந்து
விம்மி உயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ,
நம்மின் பிரிந்த இடத்து?
உரை
   
40. இன்று அல்கல் ஈர்ம் படையுள் ஈர்ங்கோதை தோள் துணையா
நன்கு வதிந்தனை;-நல் நெஞ்சே!-நாளை நாம்
குன்று அதர் அத்தம் இறந்து, தமியமாய்,
என்கொலோ சேக்கும் இடம்?
உரை