திணைமாலை நூற்றைம்பது

(கணிமேதாவியார்)

1. குறிஞ்சி

தலைமகளும் தோழியும் ஒருங்கு இருந்தவழிச் சென்று,
தலைமகன் தோழியை மதியுடம்படுத்தது
1. நறை படர் சாந்தம் அற எறிந்து, நாளால்
உறை எதிர்ந்து வித்திய ஊழ் ஏனல்,-பிறை எதிர்ந்த
தாமரைபோல் வாள் முகத்துத் தாழ்குழலீர்!-காணீரோ,
ஏ மரை போந்தன ஈண்டு?
   
தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது
2. சுள்ளி, சுனை நீலம், சோபாலிகை, செயலை,
அள்ளி அளகத்தின்மேல், ஆய்ந்து, தெள்ளி,
இதணால் கடி ஒடுங்கா ஈர்ங் கடா யானை
உதணால் கடிந்தான் உளன்.
   
பகற்குறிக்கண் வந்த தலைமகனைக் கண்டு,
தோழி செறிப்பு அறிவுறீஇயது
3. சாந்தம் எறிந்து உழுத சாரல், சிறு தினை,
சாந்தம் எறிந்த இதண் மிசை, சாந்தம்
கமழக் கிளி கடியும் கார் மயில் அன்னாள்
இமிழ, கிளி எழா, ஆர்த்து.
   
தலைமகள் இற்செறிந்த காலத்து, புனத்தின்கண் வந்த தலைமகன்
தலைமகளைக் காணாது ஆற்றாது பெயர்கின்றான் சொல்லியது
4. கோடாப் புகழ் மாறன் கூடல் அனையாளை
ஆடா அடகினும் காணேன்; போர் வாடாக்
கருங் கொல் வேல் மன்னர் கலம் புக்க கொல்லோ,
மருங்குல் கொம்பு அன்னாள் மயிர்?
   
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச்
சொல்லுவாளாய், தோழி செறிப்பு அறிவுறீஇயது
5. வினை விளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப்
பனை விளைவு நாம் எண்ண, பாத்தித் தினை விளைய,-
மை ஆர் தடங் கண் மயில் அன்னாய்!-தீத் தீண்டு
கையார் பிரிவித்தல் காண்!
   
இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி மறுத்துச் சொல்லியது
6. மால் நீலம் மாண்ட துகில் உமிழ்வது ஒத்து, அருவி
மால் நீல மால் வரை நாட! கேள்: மா நீலம்
காயும் வேற் கண்ணாள், கனை இருளில் நீ வர,
ஆயுமோ? மன்ற, நீ ஆய்!
   
7. கறி வளர் பூஞ் சாரல், கைந்நாகம் பார்த்து,
நெறி வளர் நீள் வேங்கை கொட்கும்,-முறி வளர்
நல் மலை நாட!-இர வரின், வாழாளால்,
நல் மலை நாடன் மகள்.
   
பின்னிலை முனியாது நின்ற தலைமகன் தோழியை மதி உடம்படுத்தது
8. அவட்குஆயின், ஐவனம் காவல் அமைந்தது;
இவட்குஆயின், செந் தினை கார் ஏனல்; இவட்குஆயின்,
எண் உளவால், ஐந்து; இரண்டு ஈத்தான்கொல்? என் ஆம்கொல்?
கண் உளவால், காமன் கணை!
   
பாங்கற்குத் தலைமகன் தலைமகளைக் கண்ட வகை கூறி,
தன்ஆற்றாமை மிகுதி சொல்லியது
9. வஞ்சமே என்னும் வகைத்தால்; ஓர் மா வினாய்,
தஞ்சம் தமியனாய்ச் சென்றேன்; என் நெஞ்சை
நலம் கொண்டு ஆர் பூங் குழலாள், நன்று ஆயத்து, அன்று, என்
வலம் கொண்டாள், கொண்டாள் இடம்.
   
தோழி நெறி விலக்கியது
10. கரு விரல், செம் முக, வெண் பல், சூல், மந்தி
பரு விரலால் பைஞ் சுனை நீர் தூஉய், பெரு வரைமேல்
தேன் தேவர்க்கு ஓக்கும் மலை நாட! வாரலோ,
வான் தேவர் கொட்கும் வழி!
   
11. கரவு இல் வள மலைக் கல் அருவி நாட!
உர வில் வலியாய், ஒரு நீ, இரவின்,
வழிகள் தாம் சால வர அரிய; வாரல்,
இழி கடா யானை, எதிர்!
   
வெறி விலக்கி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது
12. வேலனார் போக; மறி விடுக்க; வேரியும்
பாலனார்க்கு ஈக;-பழியிலாள் பாலால்
கடும் புனலின் நீந்தி, கரை வைத்தாற்கு அல்லால்,
நெடும் பணைபோல் தோள் நேராள், நின்று.
   
நெறியினது அருமை கூறி, தோழி இரவுக்குறி மறுத்தது
13. ஒரு வரைபோல் எங்கும் பல வரையும் சூழ்ந்த
அரு வரை உள்ளதாம் சீறூர்; வரு வரையுள்
ஐ வாய நாகம்; புறம் எல்லாம், ஆயுங்கால்,
கை வாய நாகம் சேர் காடு.
   
செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது
14. வருக்கை வள மலையுள், மாதரும் யானும்,
இருக்கை இதண் மேலேம் ஆக, பருக் கைக்
கடாஅம் மால் யானை கடிந்தானை அல்லால்,
தொடாஅவால், என் தோழி தோள்.
   
தலைமகன் சான்றோரை வரைவு வேண்டி விடுத்த இடத்து,தலைமகள்
தந்தைக்கும் தனையன்மார்க்கும் நற்றாய் அறத்தொடு நின்றது
15. வாடாத சான்றோர் வரவு எதிர்கொண்டிராய்க்
கோடாது நீர் கொடுப்பின் அல்லது, கோடா
எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப்
பொழிலும் விலை ஆமோ, போந்து?
   
தோழி சேட்படுத்த இடத்து, தலைமகன் தனது
ஆற்றாமையால் சொல்லியது
16. ‘நாள் நாகம் நாறும் நனை குழலாள் நல்கி, தன்
பூண் ஆகம் நேர்வு அளவும் போகாது, பூண் ஆகம்’
என்றேன்; இரண்டாவது உண்டோ? மடல் மாமேல்,
நின்றேன், மறுகிடையே நேர்ந்து.
   
'நின்னால் சொல்லப்பட்டவளை அறியேனாலோ'
என்ற தோழிக்குத் தலைமகன் அறிய உரைத்தது
17. அறிகு அவளை; ஐய இடை, மடவாய்! ஆய,
சிறிது அவள் செல்லாள், இறும் என்று அஞ்சிச் சிறிது, அவள்
நல்கும்வாய் காணாது, நைந்து உருகி என் நெஞ்சம்
ஒல்கும்வாய் ஒல்கல் உறும்.
   
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது
18. என் ஆம் கொல்?-ஈடு இல் இள வேங்கை நாள் உரைப்ப,
பொன் ஆம், போர் வேலவர்தாம் புரிந்தது; என்னே!
மருவி ஆம், மாலை மலை நாடன் கேண்மை;
இருவியாம், ஏனல் இனி.
   
பின்னின்ற தலைமகன் தோழி குறை மறாமல் தனது
ஆற்றாமை மிகுதி சொல்லியது
19. பால் ஒத்த வெள் அருவி பாய்ந்து ஆடி, பல் பூப் பெய்-
தாலொத்த ஐவனம் காப்பாள் கண் வேல் ஒத்து, என்
நெஞ்சம் வாய்ப் புக்கு ஒழிவு காண்பானோ, காண் கொடா?
அம் சாயற்கே நோவல் யான்.
   
கையுறை மறை
20. நாள் வேங்கை பொன் விளையும் நல் மலை நல் நாட!
கோள் வேங்கை போல் கொடியார் என் ஐயன்மார்; கோள் வேங்கை
அன்னையால் நீயும்; அருந் தழை யாம் ஏலாமைக்கு
என்னையோ? நாளை எளிது.
   
ஆற்றானாய தலைமகனைத் தோழி ஏன்றுகொண்டு கையுறை எதிர்ந்தது
21. ‘பொன் மெலியும் மேனியாள் பூஞ் சுணங்கு மென் முலைகள்
என் மெலிய வீங்கினவே, பாவம்!’ என்று, என் மெலிவிற்கு?
அண் கண்ணி வாடாமை, யான், ‘நல்ல’ என்றால், தான்
உண்கண்ணி வாடாள் உடன்று.
   
பகற்குறிக்கண் தலைமகள் குறிப்பு இன்றிச் சார்கிலாத தலைமகன்
தனது ஆற்றாமை சொல்லியது
22. கொல் யானை வெண் மருப்பும், கொல் வல் புலி அதளும்,
நல் யானை நின் ஐயர் கூட்டுண்டு செல்வார்தாம்
ஓர் அம்பினான் எய்து போக்குவர்; யான் போகாமல்,
ஈர் அம்பினால் எய்தாய், இன்று.
   
'நின்னால் குறிக்கப்பட்டாளை யான் அறியேன்' என்ற தோழிக்குத்
தலைமகன் கூறியது; பாங்கற்குக் கூறியதூஉம் ஆம்
23. பெரு மலை தாம் நாடி, தேன் துய்த்து, பேணாது
அரு மலை மாய்க்குமவர் தங்கை திரு முலைக்கு
நாண் அழிந்து, நல்ல நலன் அழிந்து, நைந்து உருகி,
ஏண் அழிதற்கு யாம் ஏயினம்.
   
தோழி குறை மறாமல் தலைமகன் தனது ஆற்றாமை மிகுதி சொல்லியது
24. நறுந் தண் தகரம், வகுளம், இவற்றை
வெறும் புதல்போல் வேண்டாது, வேண்டி, எறிந்து உழுது,
செந் தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு
நொந்து இனைய வல்லேளா? நோக்கு!
   
தோழி தலைமகனை நெறி விலக்கி, வரைவு கடாயது
25. கொல் இயல் வேழம், குயவரி கோட் பிழைத்து,
நல் இயல் தம் இனம் நாடுவபோல், நல் இயல்
நாம வேற் கண்ணாள் நடுநடுப்ப வாரலோ,
ஏம வேல் ஏந்தி, இரா!
   
26. கருங் கால் இள வேங்கை கான்ற பூக் கல்மேல்
இருங் கால் வய வேங்கை ஏய்க்கும் மருங்கால்
மழை வளரும் சாரல் இர வரின், வாழாள்,
இழை வளரும் சாயல் இனி.
   
தோழி படைத்து மொழி கிளவியான் வரைவு கடாயது
27. பனி வரை நீள் வேங்கைப் பய மலை நல் நாட!
‘இனி வரையாய்’ என்று எண்ணிச் சொல்வேன்; முனி வரையுள்
நின்றான் வலியாக நீ வர, யாய் கண்டாள்;
ஒன்றாள், காப்பு ஈயும், உடன்று.
   
தலைமகன் சொன்ன குறிவழியே சென்று, தலைமகளைக்
கண்டு, பாங்கன் சொல்லியது
28. மேகம் தோய் சாந்தம், விசை, திமிசு, காழ் அகில்,
நாகம் தோய் நாகம், என இவற்றைப் போக
எறிந்து, உழுவார் தங்கை இருந் தடங்கண் கண்டும்,
மறிந்து உழல்வானோ, இம் மலை?
   
பகற்குறிக்கண் இடம் காட்டியது
29. பலா எழுந்தபால் வருக்கைப் பாத்தி அதன் நேர்
நிலா எழுந்த வார் மணல் நீடி, சுலா எழுந்து,
கான் யாறு கால் சீத்த காந்தள் அம் பூந் தண் பொதும்பர்-
தான் நாறத் தாழ்ந்த இடம்.
   
பாங்கற்குத் தலைமகன் கூறியது
30. திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,
தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்,
புனம் காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்
மனம் காக்க வைத்தார், மருண்டு.
   
தோழி தலைமகளை மெலிதாகச் சொல்லி, குறை நயப்பக் கூறியது
31. தன் குறை இது என்னான், தழை கொணரும் தண் சிலம்பன்
நின் குறை என்னும் நினைப்பினனாய், பொன் குறையும்
நாள் வேங்கை நீழலுள் நண்ணான்; எவன்கொலோ,
கோள் வேங்கை அன்னான் குறிப்பு?