4. முல்லைபருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது
93. கருங் கடல் மாந்திய வெண் தலைக் கொண்மூ
இருங் கடல் மா கொன்றான் வேல் மின்னி, பெருங் கடல்-
தன்போல் முழங்கி, தளவம் குருந்து அணைய,
என்கொல், யான் ஆற்றும் வகை?
   
94. பகல் பருகிப் பல் கதிர் ஞாயிறு கல் சேர,
இகல் கருதித் திங்கள் இருளை, பகல் வர
வெண் நிலாக் காலும் மருள் மாலை,-வேய்த்தோளாய்!-
உள் நிலாது, என் ஆவி ஊர்ந்து.
   
தோழி தலைமகளைப் பருவம் காட்டி வற்புறுத்தியது
95. மேல் நோக்கி வெங் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி,
கான் ஓக்கம் கொண்டு, அழகா-காண், மடவாய்! மான் நோக்கி!-
போது ஆரி வண்டு எலாம் நெட்டெழுத்தின்மேல் புரிய,
சாதாரி நின்று அறையும், சார்ந்து.
   
மாலைப் பொழுது கண்டு ஆற்றாளாய தலைமகள்
தோழிக்குச் சொல்லியது
96. இருள் பரந்து ஆழியான்தன் நிறம்போல், தம்முன்
அருள் பரந்த ஆய் நிறம் போன்று, மருள் பரந்த
பால் போலும் வெண் நிலவும்,-பை அரவு அல்குலாய்!-
வேல் போலும், வீழ் துணை இலார்க்கு.
   
97. பாழிபோல் மாயவன் தன் பற்றார் களிற்று எறிந்த
ஆழிபோல் ஞாயிறு கல் சேர, தோழியோ!
மால் மாலை, தம்முன் நிறம்போல் மதி முளைப்ப,
யான், மாலை ஆற்றேன், இனைந்து.
   
'பருவம் அன்று' என்று வற்புறுத்திய தோழிக்குத் தலைமகள்
வன்புறை எதிர் அழிந்து சொல்லியது
98. வீயும்-வியன் புறவின் வீழ் துளியான், மாக் கடுக்கை;
நீயும் பிறரொடும் காண், நீடாதே;-ஆயும்
கழல் ஆகி, பொன் வட்டு ஆய், தார் ஆய், மடல் ஆய்,
குழல் ஆகி, கோல் சுரியாய், கூர்ந்து.
   
99. ‘பொன் வாளால் காடு இல் கரு வரை போர்த்தாலும்
என்? வாளா’ என்றி;-இலங்கு எயிற்றாய்!-என் வாள்போல்
வாள் இழந்த, கண்; தோள் வனப்பு இழந்த; மெல் விரலும்,
நாள் இழந்த, எண் மிக்கு, நைந்து.
   
பருவம் கண்டு அழிந்த கிழத்தி, தோழிக்குச் சொல்லியது
100. பண்டு இயையச் சொல்லிய சொல் பழுதால்; மாக் கடல்
கண்டு இயைய மாந்தி, கால்வீழ்த்து, இருண்டு, எண் திசையும்
கார் தோன்ற, காதலர் தேர் தோன்றாது; ஆகவே,
பீர் தோன்றி, நீர் தோன்றும், கண்.
   
101. வண்டுஇனம் வௌவாத ஆம்பலும், வார் இதழான்
வண்டுஇனம் வாய் வீழா மாலையும், வண்டுஇனம்
ஆராத பூந் தார் அணி தேரான்தான் போத
வாராத நாளே, வரும்.
   
102. மான் எங்கும் தம் பிணையோடு ஆட, மறி உகள,
வான் எங்கும் வாய்த்து வளம் கொடுப்ப, கான் எங்கும்
தேன் இறுத்த வண்டோடு, ‘தீ, தா’ என, தேராது,
யான் இறுத்தேன், ஆவி இதற்கு.
   
'பருவம் அன்று' என்று வற்புறுத்தின தோழிக்குத் தலைமகள்,
'பருவமே' என்று அழிந்து சொல்லியது
103. ஒருவந்தம் அன்றால், உறை முதிரா நீரால்;
கருமம் தான் கண்டு அழிவுகொல்லோ?-'பருவம் தான்
பட்டின்றே’ என்றி;-பணைத் தோளாய்!-கண்ணீரால்
அட்டினேன், ஆவி அதற்கு.
   
பருவம் கண்டு அழிந்த கிழத்தி கொன்றைக்குச் சொல்லுவாளாய்த்
தோழி கேட்பச் சொல்லியது
104. ஐந்து உருவின் வில் எழுதி, நால் திசைக்கும், முந்நீரை,
இந்து உருவின் மாந்தி, இருங் கொண்மூ, முந்து உருவின்
ஒன்றாய், உரும் உடைத்தாய், பெய் வான்போல், ‘பூக்கு’ என்று,
கொன்றாய்! கொன்றாய், எற் குழைத்து.
   
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
105. எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்,
கொல்லை தரு வான் கொடிகள் ஏறுவ காண்-முல்லை
பெருந் தண் தளவொடு தம் கேளிரைப்போல், காணாய்,
குருந்தம் கொடுங்கழுத்தம் கொண்டு.
   
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர்
அழிந்து சொல்லியது
106. என்னரே, ஏற்ற துணை பிரிந்தார்? ‘ஆற்று’ என்பார்
அன்னரே ஆவர், அவரவர்க்கு; முன்னரே
வந்து, ஆரம், தேம் கா வரு முல்லை, சேர் தீம் தேன்
கந்தாரம் பாடும், களித்து.
   
'பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது
107. கரு உற்ற காயாக் கண மயில் என்று அஞ்சி,
உரும் உற்ற பூங் கோடல் ஓடி, உரும் உற்ற
ஐந் தலை நாகம் புரையும் அணிக் கார்தான்
எம்தலையே வந்தது, இனி.
   
'பருவம் அன்று' என்று வற்புறுத்தும் தோழிக்குத்
தலைமகள் ஆற்றாது சொல்லியது
108. கண் உளவாயின், முலை அல்லை, காணலாம்;
எண் உளவாயின், இறவாவால்; எண் உளவா,
அன்று ஒழிய, நோய் மொழிச் சார்வு ஆகாது;-உருமுடை வான்
ஒன்று ஒழிய, நோய் செய்தவாறு.
   
பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
109. என்போல் இகுளை! இருங் கடல் மாந்திய கார்
பொன்போல் தார் கொன்றை புரிந்தன;-பொன்போல்
துணை பிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர்; தோன்றார்,
இணை பிரிந்து வாழ்வர், இனி.
   
110. பெரியார் பெருமை பெரிதே!-இடர்க்கண்
அரியார் எளியர் என்று, ஆற்றா, பரிவாய்,
தலை அழுங்க, தண் தளவம் தாம் நகக் கண்டு, ஆற்றா,
மலை அழுத, சால மருண்டு.
   
111. கானம் கடி அரங்கா, கைம்மறிப்பக் கோடலார்,
வானம் விளிப்ப, வண்டு யாழாக, வேனல்,
வளரா மயில் ஆட, வாட்கண்ணாய்! சொல்லாய்,
உளர் ஆகி, உய்யும் வகை.
   
பருவம் காட்டி, தோழி, தலைமகளை வற்புறுத்தியது
112. தேரோன் மலை மறைய, தீம் குழல் வெய்து ஆக,
வாரான் விடுவானோ?-வாட்கண்ணாய்!-கார் ஆர்
குருந்தோடு முல்லை குலைத்தனகாண்; நாமும்
விருந்தோடு நிற்றல், விதி.
   
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
113. பறி, ஓலை, மேலொடு கீழா, இடையர்
பிறியோலை பேர்த்து, விளியா, கதிப்ப,
நரி உளையும் யாமத்தும் தோன்றாரால்-அன்னாய்!-
விரி உளை மான் தேர் மேல் கொண்டார்.
   
பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, தோழி குருந்த மரத்திற்குச்
சொல்லுவாளாய், 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது
114. பாத்து, படு கடல் மாந்தி, பல கொண்மூ,
காத்து, கனை துளி சிந்தாமை, பூத்து-
குருந்தே!-பருவம் குறித்து, இவளை, ‘நைந்து
வருந்தே’ என்றாய், நீ வரைந்து.
   
வினை முற்றி மீண்ட தலைமகன், தலைமகட்குத் தூது விடுகின்றான்,
தூதிற்குச் சொல்லியது
115. படும் தடங் கண் பல் பணைபோல் வான் முழங்கல் மேலும்,
கொடுந் தடங் கண் கூற்று மின் ஆக, நெடுந் தடங் கண்
நீர் நின்ற நோக்கின்நெடும் பணை மென் தோளாட்கு,
‘தேர் நின்றது’ என்னாய், திரிந்து.
   
பருவம் கண்டு, ஆற்றாளாய தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி
தான் ஆற்றாளாய்ச் சொல்லியது
116. குருந்தே! கொடி முல்லாய்! கொன்றாய்! தளவே!
முருந்து ஏய் எயிறொடு தார் பூப்பித்திருந்தே,
அரும்பு ஈர் முலையாள் அணி குழல் தாழ் வேய்த்தோள்
பெரும் பீர் பசப்பித்தீர், பேர்ந்து.
   
தலைமகளைத் தோழி பருவம் காட்டி, வற்புறுத்தியது
117. கத நாகம் புற்று அடையக் கார் ஏறு சீற,
மத நாகம் மாறு முழங்க, புதல் நாகம்
பொன் பயந்த, வெள்ளி புறமாக;-பூங்கோதாய்!-
என் பசந்த, மென் தோள், இனி?
   
'பருவம் அன்று' என்று, வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள்
வன்புறை எதிர் அழிந்து சொல்லியது
118. கார் தோன்றிப் பூவுற்ற காந்தள் முகை, விளக்குப்
பீர் தோன்றித் தூண்டுவாள் மெல் விரல்போல்; நீர் தோன்றி,
தன் பருவம் செய்தது கானம்;-தடங் கண்ணாய்!-
‘என் பருவம் அன்று’ என்றி, என்று.
   
119. ‘உகவும் கார் அன்று’ என்பார், ஊரார்; அதனைத்
தகவும் தகவு அன்று என்று ஓரேன்; தகவேகொல்?
வண் துடுப்பு ஆய், பாம்பு ஆய், விரல் ஆய், வளை முரி ஆய்,
வெண் குடை ஆம்,-தண் கோடல் வீந்து.
   
120. ‘பீடு இலார்’ என்பார்கள் காணார்கொல்?-வெங் கதிரால்
கோடு எலாம் பொன் ஆய்க் கொழுங் கடுக்கை, காடு எலாம்,
அத்தம் கதிரோன் மறைவதன்முன், வண்டொடு தேன்,
துத்தம் அறையும், தொடர்ந்து.
   
121. ஒருத்தி யான்; ஒன்று அல பல் பகை, என்னை
விருத்தியாக் கொண்டன-வேறாப் பொருத்தின்,
மடல் அன்றில், மாலை, படு வசி, ஆம்பல்,
கடல், அன்றி, கார், ஊர், கறுத்து.
   
122. கானம் தலைசெய, காப்பார் குழல் தோன்ற,
ஏனம் இடந்த மணி எதிரே, வானம்
நகுவதுபோல் மின் ஆட, நாணா என் ஆவி
உகுவது போலும், உடைந்து.
   
குறித்த பருவத்தின்கண் வந்த தலைமகனைப் புணர்ந்திருந்த தலைமகள்
முன்பு தன்னை நலிந்த குழல் ஓசை அந்திமாலைப் பொழுதின்கண்
கேட்டதனால்,துயர் உறாதாளாய்த் தோழிக்குச் சொல்லியது
123. இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்;
உம்மையே ஆம் என்பார் ஓரார்காண்;-நம்மை
எளியர் என நலிந்த ஈர்ங்குழலார், ஏடி!
தெளியச் சுடப்பட்டவாறு!