31. மத்த மயில் அன்ன சாயலாய்! மன்னிய சீர்த்
தத்தன், சகோடன், கிருத்திரமன், புத்திரி
புத்ரன், அபவித்தனொடு, பொய் இல் உபகிருதன்,
இத் திறத்த,-எஞ்சினார் பேர்.
   
32. உரையான், குலன், குடிமை; ஊனம் பிறரை
உரையான்; பொருளோடு, வாழ்வு, ஆயு, உரையானாய்,-
பூ ஆதி வண்டு தேர்ந்து உண் குழலாய்!-ஈத்து உண்பான்
தேவாதி தேவனாத் தேறு!
   
33. பொய் உரையான், வையான், புறங்கூறான் யாவரையும்,
மெய் உரையான், உள்ளனவும் விட்டு உரையான், எய் உரையான்,-
கூந்தல் மயில் அன்னாய்!-குழீஇய வான் விண்ணோர்க்கு
வேந்தனாம், இவ் உலகம் விட்டு.
   
34. சிதை உரையான், செற்றம் உரையான், சீறு இல்லான்,
இயல்பு உரையான், ஈனம் உரையான், நசையவர்க்குக்
கூடுவது ஈவானை,-கொவ்வைபோல் செவ் வாயாய்!-
நாடுவர், விண்ணோர், நயந்து.
   
35. துறந்தார், துறவாதார், துப்பு இலார், தோன்றாது
இறந்தார், ஈடு அற்றார், இனையர், சிறந்தவர்க்கும்,-
பண் ஆளும் சொல்லாய்!-பழி இல் ஊன் பாற்படுத்தான்,
மண் ஆளும், மன்னனாய் மற்று.
   
36. கால் இல்லார், கண் இல்லார், நா இல்லார், யாரையும்
பால் இல்லார், பற்றிய நூல் இல்லார், சாலவும்
ஆழப் படும் ஊண் அமைத்தார், இமையவரால்
வீழப்படுவார், விரைந்து.
   
37. அழப் போகான், அஞ்சான், அலறினால் கேளான்,
எழப் போகான், ஈடு அற்றார் என்றும் தொழப் போகான்,
என்னே, இக் காலன்! நீடு ஓரான், தவம் முயலான்,
கொன்னே இருத்தல் குறை.
   
38. எழுத்தினால் நீங்காது, எண்ணால் ஒழியாது, ஏத்தி
வழுத்தினால் மாறாது, மாண்ட ஒழுக்கினால்,
நேராமை சால உணர்வார் பெருந் தவம்
போகாமை, சாலப் புலை.
   
39. சாவது எளிது; அரிது, சான்றாண்மை; நல்லது
மேவல் எளிது; அரிது, மெய் போற்றல்; ஆவதன்கண்
சேறல் எளிது; நிலை அரிது; தெள்ளியர் ஆய்
வேறல் எளிது; அரிது, சொல்.
   
40. உலையாமை, உற்றதற்கு ஓடி உயிரை
அலையாமை, ஐயப்படாமை, நிலையாமை
தீர்க்கும் வாய் தேர்ந்து, பசி உண்டி நீக்குவான்,
நோக்கும் வாய் விண்ணின் உயர்வு.