41. குறுகான், சிறியாரை; கொள்ளான், புலால்; பொய்
மறுகான்; பிறர் பொருள் வௌவான்; இறுகானாய்,
ஈடு அற்றவர்க்கு ஈவான் ஆயின், நெறி நூல்கள்
பாடு இறப்ப, பன்னும் இடத்து.
   
42. கொல்லான், உடன்படான், கொல்வார் இனம் சேரான்,
புல்லான் பிறர் பால், புலால் மயங்கல் செல்லான்,
குடிப் படுத்துக் கூழ் ஈந்தான்,-கொல் யானை ஏறி
அடிப் படுப்பான், மண் ஆண்டு அரசு.
   
43. சூது உவவான், பேரான், சுலா உரையான், யார்திறத்தும்
வாது உவவான், மாதரார் சொல் தேறான்,-காது தாழ்
வான் மகர வார் குழையாய்!-மா தவர்க்கு ஊண் ஈந்தான்-
தான் மகர வாய் மாடத்தான்.
   
44. பொய்யான், பொய் மேவான், புலால் உண்ணான், யாவரையும்
வையான், வழி சீத்து, வால் அடிசில் நையாதே
ஈத்து, உண்பான் ஆகும்-இருங் கடல் சூழ் மண் அரசாய்ப்
பாத்து உண்பான், ஏத்து உண்பான், பாடு.
   
45. இழுக்கான், இயல் நெறி; இன்னாத வெஃகான்;
வழுக்கான், மனை; பொருள் வௌவான்; ஒழுக்கத்தால்
செல்வான்; செயிர் இல் ஊண் ஈவான்;-அரசு ஆண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து.
   
46. களியான், கள் உண்ணான், களிப்பாரைக் காணான்,
ஒளியான் விருந்திற்கு, உலையான், எளியாரை
எள்ளான், ஈத்து உண்பானேல், ஏதம் இல் மண் ஆண்டு
கொள்வான், குடி வாழ்வான், கூர்ந்து.
   
47. பெரியார் சொல் பேணி, பிறழாது நின்று,
பரியா அடியார்ப் பறியான், கரியார் சொல்
தேறான், இயையான், தெளிந்து அடிசில் ஈத்து உண்பான்-
மாறான், மண் ஆளுமாம் மற்று.
   
48. வேற்று அரவம் சேரான், விருந்து ஒளியான், தன் இல்லுள்
சோற்று அரவம் சொல்லி உண்பான் ஆயின், மாற்று அரவம்
கேளான், கிளை ஓம்பின், கேடு இல் அரசனாய்,
வாளால் மண் ஆண்டு வரும்.
   
49. யானை, குதிரை, பொன், கன்னியே, ஆனிரையோடு,
ஏனை ஒழிந்த இவை எல்லாம், ஆன் நெய்யால்
எண்ணம் ஆய், மா தவர்க்கு ஊண் ஈந்தான்-வைசிர-
வண்ணன் ஆய் வாழ்வான் வகுத்து.
   
50. எள்ளே, பருத்தியே, எண்ணெய், உடுத்தாடை,
வள்ளே, துணியே, இவற்றொடு, கொள் என,
அன்புற்று, அசனம் கொடுத்தான்-துணையினோடு
இன்புற்று வாழ்வான், இயைந்து.