71. நடப்பார்க்கு ஊண், நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண்,
கிடப்பார்க்கு ஊண், கேளிர்க்கு ஊண், கேடு இன்று உடல் சார்ந்த
வானகத்தார்க்கு ஊணே, மறுதலையார்க்கு ஊண், அமைத்தான்-
தான் அகத்தே வாழ்வான், தக.
   
72. உணராமையால் குற்றம்; ஓத்தான் வினை ஆம்;
உணரான் வினைப் பிறப்புச் செய்யும்; உணராத
தொண்டு இருந் துன்பம் தொடரும்; பிறப்பினான்
மண்டிலமும் ஆகும்; மதி.
   
73. மனை வாழ்க்கை, மா தவம், என்று இரண்டும், மாண்ட
வினை வாழ்க்கை ஆக விழைப; மனை வாழ்க்கை
பற்றுதல்; இன்றி விடுதல், முன் சொல்லும்; மேல்
பற்றுதல், பாத்து இல் தவம்.
   
74. இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்,
நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால்
கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு.
   
75. அறுவர் தம் நூலும் அறிந்து, உணர்வு பற்றி,
மறு வரவு மாறு ஆய நீக்கி, மறு வரவின்
மா சாரியனா, மறுதலைச் சொல் மாற்றுதலே-
ஆசாரியனது அமைவு.
   
76. ஒல்லுவ, நல்ல உருவ, வேல் கண்ணினாய்!.
வல்லுவ நாடி, வகையினால், சொல்லின்,
கொடையினால் போகம்; சுவர்க்கம், தவத்தால்;
அடையாத் தவத்தினால் வீடு.
   
77. நாற் கதியும் துன்பம் நவை தீர்த்தல் வேண்டுவான்,
பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து, நூற் கதியின்
எல்லை உயர்ந்தார் தவம் முயலின், மூன்று, ஐந்து, ஏழ்,
வல்லை வீடு ஆகும்; வகு!
   
78. தாய் இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி,
வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்,
கைத்து ஊண் பொருள் இழந்தார், கண்ணிலவர்க்கு, ஈய்ந்தார்;-
வைத்து வழங்கி வாழ்வார்.
   
79. சாக்காடு, கேடு, பகை, துன்பம், இன்பமே,
நாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும், என நாக் காட்ட,
நட்டார்க்கு இயையின், தமக்கு இயைந்த கூறு, உடம்பு
அட்டார்வாய்ப் பட்டது பண்பு.
   
80. புலையாளர், புண்பட்டார், கண் கெட்டார், போக்கு இல்
நிலையாளர், நீர்மை இழந்தார், தலையாளர்க்கு
ஊண் கொடுத்து, ஊற்றாய் உதவினார்-மன்னராய்க்-
காண் கொடுத்து வாழ்வார், கலந்து.