5. நெய்தல்
49. நாவாய் வழங்கு நளி திரைத் தண் கடலுள்
ஓவா கலந்து ஆர்க்கும் ஒல்லென் இறாக்குப்பை!
பா ஆர் அம் சேர்ப்பற்கு உரையாய்-பரியாது,
நோயால் நுணுகியவாறு.
   
50. நெடுங் கடல் தண் சேர்ப்ப! நின்னோடு உரையேன்;
ஒடுங்கு மடல் பெண்ணை அன்றிற்கும் சொல்லேன்;
கடுஞ் சூளின் தான் கண்டு, கானலுள் மேயும்
தடந் தாள் மட நாராய்! கேள்.
   
51. மணி நிற நெய்தல் மலர் புரையும் கண்ணாய்!
அணி நலம் உண்டு இறந்து, (ந)ம் அருளா விட்ட
துணி முந்நீர்ச் சேர்ப்பற்குத் தூதோடு வந்த
பணி மொழிப் புள்ளே! பற.
   
52. அன்னையும் இல் கடிந்தாள்; யாங்கு இனி யாம் என் செய்கம்?
புன்னையங் கானலுள் புக்கு இருந்தும் நின்னை
நினையான் துறந்த நெடுங் கழிச் சேர்ப்பற்கு
உரையேனோ, பட்ட பழி?
   
53. அலவன் வழங்கும் அடும்பு இவர் எக்கர்
நிலவு நெடுங் கானல் நீடார் துறந்தார்;
புலவு மீன் குப்பை கவரும் துறைவன்
கலவான்கொல், தோழி! நமக்கு?
   
காமம் மிக்க கழிபடர் கிளவி
54. என்னையர் தந்த இற உணங்கல் யாம் கடிந்து,
புன்னையங் கானல் இருந்தேமா, பொய்த்து எம்மைச்
சொல் நலம் கூறி, நலன் உண்ட சேர்ப்பனை
என்னைகொல் யாம் காணுமாறு?
   
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியால் சொல் எடுப்புண்ட
தலைமகள் சொல்லியது
55. கொக்கு ஆர் கொடுங் கழிக் கூடு நீர்த் தண் சேர்ப்பன்
நக்காங்கு அசதி நனி ஆடி,-தக்க
பொரு கயற்கண்ணினாய்!-புல்லான் விடினே,
இரு கையும் நில்லா, வளை.
   
[இதன் துறைக் குறிப்பு மறைந்து போயிற்று.]
56. நுரை தரும் ஓதம் கடந்து, எமர் தந்த
கருங் கரை வன்மீன் கவரும் புள் ஓப்பின்,
புகர் இல்லேம் யாம் இருப்ப, பூங் கழிச் சேர்ப்பன்
நுகர்வனன், உண்டான், நலம்.
   
இரவுக் குறி.......
57. கொடு வாய்ப் புணர் அன்றில் கொய் மடல் பெண்ணைத்
தடவுக் கிளை பயிரும்-தண் கடல் சேர்ப்பன்
நிலவுக் கொடுங் கழி நீந்தி, நம் முன்றில்
புலவுத் திரை பொருத போழ்து.
   
காமம் மிக்க கழிபடர் கிளவி
58. சுறா எறி குப்பை சுழலும் கழியுள்,
இறா எறி ஓதம் அலற இரைக்கும்
உறாஅ நீர்ச் சேர்ப்பனை உள்ளி இருப்பின்,
பொறாஅ, என் முன்கை வளை.
   
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக,
தலைமகட்குச் சொல்லுவாளாய்,
தோழி படைத்து மொழிந்தது
59. தாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை-
மாழை மான் நோக்கின் மடமொழி!-'நூழை
நுழையும் மட மகன் யார்கொல்?’ என்று, அன்னை
புழையும் அடைத்தாள், கதவு.
   
தோழி தலைவிக்குத் தலைவன் வரைவொடு புகுந்தமை சொல்லியது;
வினை முற்றி மீண்ட தலைமகன் வரவு அறியச் சொல்லியதூஉம் ஆம்.
60. பொன் அம் பசலையும் தீர்ந்தது ;- பூங்கொடி!-
தென்னவன் கொற்கைக் குருகு இரிய, மன்னரை
ஓடு புறம் கண்ட ஒண் தாரான் தேர் இதோ,
கூடல் அணைய வரவு.