பக்கம் எண் :


9. கனாத்திறமுரைத்த காதை

55




60
கைத்தாயு மல்லை கணவற் கொருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பிற் போய்க்கெடுக வுய்த்துக்
கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில்
மடலவிழ் நெய்தலங் கானற் றடமுள
சோமகுண்டஞ் சூரிய குண்டந் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவ ருலகத்துத் தையலார்
போகஞ்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாமொருநாள்
ஆடுது மென்ற அணியிழைக்கவ் வாயிழையாள்
பீடன் றெனவிருந்த பின்னரே நீடிய


55
உரை
64

       பொற்றொடீஇ - பொன்னாலாய தொடியினையுடையாய், கைத்தாயும் அல்லை - நீ அவனால் வெறுக்கப்பட்டாயுமல்லை ; கணவற்கு ஒரு நோன்பு பொய்த்தாய் பழம் பிறப்பில்- முற்பிறப்பிலே நின்கணவன் பொருட்டுக் காக்கவேண்டியதொரு நோன்பு தப்பினாய், போய்க் கெடுக - அதனால் உண்டாய தீங்கு கெடுவதாக ; உய்த்துக் கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில் - காவிரி தன் நீரைக் கொண்டு சென்று கடலோடு எதிர்த்து அலைக்கும் சங்கமுகத்தயலதாகிய, மடல் அவிழ் நெய்தல் அம் கானல் - பூவின் இதழ் விரியும் நெய்தனிலத்துக் கானலிடத்தே, தடம் உள சோமகுண்டம் சூரிய குண்டம் - சோம குண்டம் சூரிய குண்டம் என்னும் பெயரையுடைய இரண்டு பொய்கைகள் உள்ளன ; துறை மூழ்கி - அவற்றின் துறைகளில் மூழ்கி, காம வேள் கோட்டம் தொழுதார் - மன்மதன் கோயிலையடைந்து அவனை வணங்கினாராயின், கணவரொடு தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார் - மகளிர் இவ் வுலகத்திலே தம் கணவரோடும் பிரியாதிருந்து இன்பமுறுவர் ; போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர் - மறுமையிலும் போக பூமியிற் போய்ப் பிறந்து கணவரோடும் பிரிவின்றி இன்பம் நுகர்வர் ; யாம் ஒரு நாள் ஆடுதும் என்ற அணியிழைக்கு - அவற்றில் யாமும் ஒரு நாள் ஆடக் கடவேம் என்று கூறிய தேவந்திக்கு, அவ் ஆயிழையாள் பீடு அன்று என இருந்த பின்னரே - கண்ணகி அங்ஙனம் துறை மூழ்கித் தெய்வந் தொழுதல் எங்கட்கு இயல்பன்று என்று சொல்லி இருந்தவளவிலே ;

       பொய்த்தாயாகலின் தீங்குமிக்கது, அதுவுங் கெடுக என்றும், போய்ப் பிறந்து கணவரொடும் இன்புறுவர் ஆதலால் என்றும் விரித் துரைக்க. இவ் வுலகத்து இன்புறலையும் போக பூமியிற் போய்ப் பிறத் தலையும் குண்டமிரண்டிற்கும் நிரனிறை யாக்கலுமாம். பட்டினப் பாலையிலும் இவை 1 "இருகாமத் திணையேரி" எனக் கூறப்பட்டன. கற்புடை மகளிர் கணவனையன்றிப் பிற தெய்வத்தை வணங்குதல் இயல்பன்றென்பது,

       
2 "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை."

       
3 "சாமெனிற் சாத னோத றன்னவன் றணந்த காலைப் பூமனும் புனைத லின்றிப் பொற்புடன் புலம்ப வைகிக் காமனை யென்றுஞ் சொல்லார் கணவற்கை தொழுது வாழ்வார் தேமலர்த் திருவொ டொப்பார் சேர்ந்தவன் செல்ல றீர்ப்பார்." என்பவற்றானறியப்படும்.

1. பட்டினப் 39. 2. குறள். 6 : 5. 3. சீவக. 1598.