பக்கம் எண் :


13. கட்டுரை காதை





45


உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
அரைச வேலி யல்ல தியாவதும்
புரைநீர் வேலி இல்லென மொழிந்து
மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி
இன்றவ் வேலி காவா தோவெனச்


42
உரை
47

       உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள் - ஒருநாள் தான் ஓரில்லத்து வாயிற் கதவினைத் தட்டினானாக அதன்பொருட்டு அவ்வில்லத்து வாழும் பிறர்க்கு உதவுவதற்கொண்ணாத வறுமை வாழ்க்கையினை உடைய கீரந்தை என்பானுடைய மனைவி, அரைச வேலி அல்லது யாவதும் புரைதீர் வேலி இல்லென மொழிந்து மன்றத்து இருத்திச் சென்றீர் அவ்வழி - நீர் போகின்ற அக் காலத்து மன்னனுடைய காவல் அல்லாது வேறு குற்றம் தீர்ந்த காவல் சிறிதும் இல்லையென்று கூறி என்னை அரணில்லாத வீட்டில் இருக்கச் செய்து போயினீர், இன்று அவ் வேலி காவாதோ என-இப்பொழுது அவ் வரைச வேலி என்னைக் காத்திடாதோ என்று கூறி வருந்த ;

       
உதவா வாழ்க்கை - உதவுவதற்கொண்ணாத வாழ்க்கை. கீரந்தை - ஓரந்தணன். புதவம் - வாயில் ; புதவக்கதவம் - கதவில்லா வீடு என்பாருமுளர். வேலி - காவல். மன்றம் - அரணில்லா இல்லம். மிடி வாழ்க்கையையுடைய கீரந்தை யென்னும் பார்ப்பனன் 'அரசனது காவலுளதாகலின் நீ அஞ்சாதே' என்று கூறித் தன் மனைவியைத் தனியே இல்லின்கண் இருக்கச் செய்து யாத்திரை சென்றிருந்த காலை, இரவில் நகரி சோதனைக்கு வந்த பாண்டியன் அவ் வில்லின் கதவைத் தட்ட, அவ்வொலி கேட்ட பார்ப்பனி இங்ஙனம் கூறினாளென்க ; பார்ப்பனன் மீண்டு வந்து இரவில் மனைவியுடன் உரையாடிக்கொண்டிருக்கும்பொழுது அரசன் கதவைத் தட்டினான் என்றும், பிறவாறும் உரைப்பாருமுளர்.