கடி
பொழில் உடுத்த கலிங்க நல் நாட்டு - மணம் நிறைந்த சோலை சூழந்த கலிங்கநாட்டின்கண்,
தீம் புனற் பழனச் சிங்கரபுரத்தினும் காம்பு எழு கானக் கபிலபுரத்தினும் - இனிய நீர்
நிறைந்த மருதநிலம் பொருந்திய சிங்கபுரத்தின்கண்ணும் மூங்கில் நிறைந்த காடுகளையுடைய
கபிலபுரத்தின்கண்ணும், அரைசு ஆள் செல்வத்து நிரை தார் வேந்தர் வடிவேல் தடக்கை
வசுவும் குமரனும் - அரசாளும் செல்வத்தினையுடைய ஒழுங்குபடத் தொடுத்த மாலை அணிந்த அரசராகிய
திருத்திய வேலினை ஏந்திய பெரிய கையினையுடைய வசுவென்பானும் குமரனென்பானும், வீயாத்
திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் - என்றுங் கெடாத செல்வத்தினையுடைய சிறந்த
குடிக்கண் தோன்றிய தாயத்தாராவர், தம்முள் பகை யுற - அத் தாயவேந்தரிருவரும் தங்களுள்
பகையுற்றமையான், இருமுக்காவதத்து இடைநிலத்து யாங்கணும் - ஆறு காவதத்திற்கு இடைப்பட்ட
நிலத்து எவ்விடத்தும், செருவெல் வென்றியிற் செல்வோர் இன்மையின் - ஒருவரை யொருவர்
வெல்லும் வெற்றியின் பொருட்டு அமர் நிகழுகை காரணமாகப் போவார் ஒருவரும் இல்லாமையான்
;
கலிங்க நன்னாட்டுச் சிங்கபுரத்தினுங் கபிலபுரத்தினும்
அரை சாள் செல்வத்து வேந்தர் வசுவுங் குமரனும் எனக்கூட்டுக. வசு சிங்க புரத்தினும் குமரன்
கபிலபுரத்தினும் ஆண்டான் என்க. தாயம் - உரிமை.
|