பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1025 

1806 கந்தார் களியானைக் காவலனார் கான்முளையை
வந்தார்வாய்த் தீதின்மை கேட்டு மறைந்திருந்து
நொந்தேன் பலகாலு நோயோடே வீகின்றே
னந்தோ வறனேமற் றாற்றேனா லாற்றேனால்.

   (இ - ள்.) கந்து ஆர் களியானைக் காவலனார் கால்முளையைத் தீதின்மை - கம்பத்திற் பொருந்திய மதயானையை உடைய சச்சந்தன் மகனுக்குத் தீதின்மையை; வந்தார் வாய்க்கேட்டு மறைந்திருந்து - வந்தவர் உரைப்பக் கேள்வியுற்றவாறே நோன்பிலே மறைந்திருந்து; பலகாலும் நொந்தேன் - பலமுறையும் (பார்த்தற்கியலாமையின்) வருந்தினேன்; அந்தோ! ஆற்றேன்! ஆற்றேன்! - (வருந்திய யான்) அந்தோ! இனி ஆற்றேன்! ஆற்றேன்!; அறனே! நோயோடே வீகின்றேன் - (ஆதலின்) அறக்கடவுளே! யான் இந் நோயுடனே இறக்கின்றேன்.

   (வி - ம்.) கந்து - கட்டுத்தறி காவலனார் : சச்சந்தன், கான்முளை - மகவு. நோன்பிலே மறைந்திருந்து என்க. வீசுகின்றேன், தெளிவுபற்றி, எதிர்காலம் நிகழ்காலமாயிற்று. அறன் - அறக்கடவுள், ஆல் : அசை.

( 250 )
1807 முன்னொருகா லென்மகனைக்
  கண்டேனென் கண்குளிரப்
பின்னொருகாற் காணப்
  பிழைத்ததென் றேவிர்கா
ளென்னொப்பார் பெண்மகளி
  ரிவ்வுலகிற் றோன்றற்கென்
றன்னப் பெடைநடையா
  ளாய்மயில்போல் வீழ்ந்தனளே.

   (இ - ள்.) முன் ஒருகால் என் மகனை என் கண் குளிரக் கண்டேன் - முன் ஒரு முறையே என் மகனை என் கண் குளிர்ச்சியடையக் கண்டேன்; தேவிர்காள்! - தேவர்களே!; பின் ஒரு கால் காணப் பிழைத்தது ஏன்? - பின்னர் ஒரு முறை காண்பதற்குத் தப்பின தீவினை யாதோ?; என் ஒப்பார் பெண் மகளிர் இவ்வுலகில் தோன்றற்க என்று - என்னைப் போன்றாராகிய நங்கையர் இவ்வுலகிலே இனியும் பிறவற்க என்று அரற்றி; அன்னப்பெடை நடையாள் ஆய்மயில்போல் வீழ்ந்தனள் - அன்னப்பேட்டின் நடையை உடைய அவள் வருந்திய மயில்போல் வீழ்ந்தனள்.

   (வி - ம்.) தாபதர்க்குக் குலமுதலியன கூறலாகா தென்றவள் தன் உணர்வழிந்து அரற்றினதாற் குலனே அன்றி மறைபொருள் எல்லாங் கூறினள்; தோழர் நல்வினை அங்ஙனம் நிகழ்த்திற்று.

( 251 )