பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 1063 

னுள்ளார் ஆதலான் இனைத்தல் செய்யேன் - நீங்காமல் நெஞ்சி லிருக்கின்றாராகையால், யான் வருந்தல் செய்யேனாய்; பொழுதும் போக்குவல் - காலமுங் கழிப்பேன்; தாம் தம் பொன் அடிபோற்றி என்றாள் - தாம் தம்மைப் பாதுகாப்பாராக என்று எழுதினாள்.

   (வி - ம்.) நோக்கவே தளிர்த்து நோக்கா திமைப்பினும் நுணுகு நல்லார் என்றது மகளிரின் பிரிவாற்றாமையைத் திறம்படவிளக்கி நிற்றல் உணர்க. புதுமணவாளனார் என்றது பழையேம் ஆகிய எம்மை நீத்து எப்பொழுதும் புது மணமே விரும்பு மியல்புடையாய் என அசதியாடியவாறு.

( 324 )
1881 இலவம்பூ வாக்குண் டன்ன
  பஞ்சிமெல் லடியி னாடன்
புலவிச்சொற் பொறித்த வோலை
  திருமுடி துளக்கி நோக்கித்
தலைவைத்த காப்பு விஞ்சை
  கொண்டபின் றாமஞ் சூழ்ந்து
கொலைவைத்த குருதி வேலான்
  றோழரைக் குறுகி னானே.1

   (இ - ள்.) இலவம்பூ அரக்கு உண்ட அன்ன - இலவம் பூவிற் சாதிலிங்கம் ஊட்டப் பெற்றால் ஒத்த; பஞ்சி மெல்லடியினாள் தன் - செம்பஞ்சு ஊட்டிய மெல்லிய அடியையுடைய தத்தையின்; புலவிச் சொல் பொறித்த ஓலை - புலவி மொழி எழுதிய ஓலையை; திருமுடி துளக்கி நோக்கி - திருமுடியைச் சாய்த்துப் பார்த்து ; தலைவைத்த காப்பு விஞ்சை கொண்ட பின் - ஓலையின் முடிவில் எழுதின தனக்குக் காவலாகிய விஞ்சையை உட்கொண்ட பின்னர்; தாமம் சூழ்ந்து - வெற்றிமாலை சூழப் பட்டு; கொலை வைத்த குருதி வேலான் - கொலைத் தொழிலைத் தன்னிடத்தே கொண்ட குருதி வேலினான்; தோழரைக் குறுகினான் - தோழரை யடைந்தான்.

   (வி - ம்.) இயல்பாகவே சிவந்த அடியாகலின் இலவம்பூ அரக்குண்டன்ன என்றார். பஞ்சி - செம்பஞ்சிக் குழம்பு. முன் புதுமணவாளனார் என்ற சொல் அவள் புலவியைப் புலப்படுத்தாதாகலின் 'புலவிச் சொற் பொறித்த வோலை' என்றார். அவ்வோலையின்கண் எழுதிய சொற் பொருளழகு கண்டு முடிதுளக்கினான் என்பது கருத்து.

( 325 )

1.இதன் பின் சில பிரதிகளிற் காணப்படுஞ் செய்யுள்:-

”அடிகணீ ரரச ராதல் அறிந்திலேம் மேலை நாட்கண் - தொடியணி தோளும் நல்ல ஆகமும் புல்லி நும்மைக் - குடி வழி வந்த தோலாக் கந்துகன் மகனென் றெண்ணி - அடிகணாம் இகழ்ந்ததெல்லாம் அருளுக என்று நின்றார்”.