பக்கம் எண் :

  1069 

8. விமலையார் இலம்பகம்

(கதைச் சுருக்கம்)

   விசயையைக்காண, வேணவாக்கொண்டு தோழரொடு தண்ட காரணிய நோக்கிய விரைந்த சீவகன் தன் வரவினை எதிர்பார்த்திருந்த விசயையின் தவப்பள்ளியை எய்தி அவளைக் கண்டு அடியில் வீழ்ந்து வணங்கி அளவிலா மகிழ்ச்சி எய்தினன். விசயையும் தன் அருமை மகனை அரிதிற் கண்டு அன்புகூர்ந்து இன்பமுற்றனள். பின்னர் விசயை கட்டியங்காரனை வெல்லுதற்குக் கோவிந்தனைத் துணைக்கொள்க என்று சீவகனுக்குணர்த்தினள். பின்னர்ச் சீவகன் விசயையைத் தன் மாமனாகிய கோவிந்தன் நகரத்திற்குப் போக்கினன். பின்பு தோழன்மாரோடு ஏமாங்கதம் புகுந்து இராசமாபுரத்துப் புறச்சோலையிற் சென்று தங்கினன். மறுநாட் காலையில் தோழரை அச் சோலையிலேயே இருக்கப் பணித்துத் தான் அழகிய வேற்றுருவங் கொண்டவனாய் அந்நகர மறுகிற் றமியனாய்ச் சென்றனன்.

   அங்ஙனம் செல்லும்பொழுது அந் நகரத்துள்ளவனாகிய சாகரதத்தன் என்னும் வணிகனுடைய மகள் விமலை என்பாள் பந்தாடியவள் அச் சீவகனைக் கண்டு அவன் பேரழகிலே நெஞ்சம் போக்கி மயங்கினள். சீவகனும் அந்நேரிழையை நோக்கி அன்பு கூர்ந்து அவ்விடத்தினின்றும் அகலமாட்டாதவனாய்ச் சாகரதத்தன் கடையின்கண் வந்திருந்தனன்.

   சீவகன் வந்து புகுந்தவுடனே அச் சாகரதத்தன் கடையிலே விலையாகாமற் றங்கிக்கிடந்த சரக்கெல்லாம் விலையாகி விட்டன. அது கண்ட தத்தன் சீவகனை நோக்கி, முகமன் மொழிந்து, ”ஐய! கணியொருவன் நின் மகள் விமலை என்பாளுக்குரிய கணவன் நின் கடைக்கு வலிய வருவான். அவன் வந்தமைக்கு அறிகுறி அப்பொழுது நின் கடைச் சரக்கெல்லாம் ஊதியமுண்டாக விரைவின் விற்றுப்போம் கண்டாய்! என்று எனக்குக் கூறியிருந்தான். அங்ஙனமே நீ என் கடையேறியவுடன் அப் பழஞ்சரக்கெல்லாம் விலைப்பட்டன. ஆதலால் நீயே விமலை கணவன் ஆதல் கூடும் என்று கருதுகின்றேன்,” என்று கூறி அவனை ஆர்வத்துடன் அழைத்தேகி விமலையை அவனுக்கு மணம் செய்வித்தனன். சீவகன் அவளுடன் இரண்டு நாள் கூடி இன்புற்றிருந்து மறுநாள் சென்று மனக்கினிய தோழரைக் கண்டனன்.