பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1096 

1938 கட்டியி னரிசியும் புழுக்குங் காணமும்
புட்டில்வாய்ச் செறித்தனர் புரவிக் கல்லவு
நெட்டிருங் கரும்பொடு செந்நென் மேய்ந்துநீர்
பட்டன வளநிழற் பரிவு தீர்ந்தவே.

   (இ - ள்.) கட்டியின் அரிசியும் புழுக்கும் காணமும் புட்டில் - கருப்புக் கட்டியுடனே கலந்த அரிசியும் வெந்த கொள்ளும் கலந்த புட்டிலை; புரவிக்கு வாய்ச் செறித்தனர் - குதிரைகட்கு வாயிலே செறித்தனர்; அல்லவும் - மற்றைய எருது முதலியனவும்; நெட்டிருங் கரும்பொடு செந் நெல் மேய்ந்து - நீண்ட பெரிய கரும்பு வயல்களிலும் செந்நெல் வயல்களிலும் மேய்ந்து; நீர் பட்டன - நீரிலே ஆடினவாய்; வளநிழல் பரிவு தீர்ந்த - நல்ல நிழலிலே கிடந்து துன்பம் நீங்கின.

   (வி - ம்.) கட்டி - கருப்புக்கட்டி. புழுக்குங் காணம் - வேகவைக்கும் கொள். புட்டில் - குதிரைக்கு உணவிட்டுக் கட்டும் மொக்கணி. அல்லவும் - ஏனைய எருது முதலியன.

( 50 )
1939 குழிமதுக் குவளையங் கண்ணி வார்குழற்
பிழிமதுக் கோதையார் பேண வின்னமு
தழிமதக் களிறனா னயின்ற பின்னரே
கழிமலர் விழித்தகண் கமலம் பட்டவே.

   (இ - ள்.) குழிமதுக் குவளை அம் கண்ணி - குழியிலுள்ள, தேன் பொருந்திய குவளை மலர்க் கண்ணியையும்; வார்குழல் - நீண்ட குழலையும்; பிழிமதுக் கோதையர் - பிழியத்தக்க தேனையுடைய கோதையையும் உடைய மகளிர்; பேண - ஓம்ப; அழிமதக் களிறனான் இன்னமுது அயின்ற பின்னர் - மிகுந்த மதமுடைய களிறுபோன்ற சீவகன் இனிய உணவை உண்ட பிறகு; கழிமலர் கண்விழித்த - கழியிலுள்ள மலர்கள் கண் விழித்தன; கமலம் பட்ட - தாமரைகள் துயின்றன.

   (வி - ம்.) இன்னமுது - உணவு. களிறனான் : சீவகன். 'அயின்ற பின்னர் கழிமலர் விழித்த கண் கமலம் பட்டவே', என்றது, அமண் சமயத்தினர் இரவின்கண் உண்ணாமையை விளக்கி நின்றது. கழிமலர் கண்விழித்த, கமலம் கண் பட்ட என ஒட்டுக. இவை ஞாயிறு பட்டது என்னும் குறிப்புடையன.

( 51 )
1940 எரிமணி யிமைத்தன வெழுந்த தீம்புகை
புரிநரம் பிரங்கின புகன்ற தீங்குழ
றிருமணி முழவமுஞ் செம்பொற் பாண்டிலு
மருமணி யின்குர லரவஞ் செய்தவே.