பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1109 

1966 காமக் கடுநோய்க் கனல்சூழ்ந்துடம் பென்னு மற்றிவ்
வீமத்தி னோடு முடனேசுட வேக லாற்றான்
றூமத்தி னார்ந்த துகிலேந்திய வல்கு றாதை
பூமொய்த் திருந்த கடைமேற்புலம் புற்றி ருந்தான்.

   (இ - ள்.) காமக் கொடு நோய் கனல்சூழ்ந்து - கொடிய காம நோயாகிய தீயினால் சூழப்பெற்று; உடம்பு என்னும் இவ் ஈமத்தினோடும் உடனே சுட - உடம்பு என்னும் விற்குடனே உயிரை முழுக்கச் சுடுதலின்; ஏகல் ஆற்றான் - போக வியலாதவனாய் ; தூமத்தின் ஆர்ந்த துகில் ஏந்திய அல்குல்தாதை - அகிற் புகையினால் நிறைந்த ஆடையணிந்த அல்குலாளின் தந்தையாகிய சாகரதத்தனின் ; பூ மொய்த்திருந்த கடை மேல் புலம்பு உற்று இருந்தான் - மலர் மாலைகள் மொய்த்திருந்த கடையின் மேல் வருத்தமுற்றிருந்தான்.

   (வி - ம்.) ஈமம் - விறகு. ஈமத்தினோடு உயிரைச் சுட என்க. அல்குல் : விமலை. புலம்புற்று - வருந்தி.

( 78 )

வேறு

1967 நாவிநோய் செய்த நறுங்குழலா ணாணீலக்
காவிநோய் செய்த கருங்கயற்கட் பூங்கொடியென்
னாவிநோய் செய்த வணங்கென் றறியாதேன்
மேவிநோய் தீர வினாத்தருவா ரில்லையே.

   (இ - ள்.) நாவி நோய் செய்த நறுங்குழலாள் - புழுகுக்கு வருத்தம் உண்டாக்கிய நறுங் கூந்தலாளை; நீலக் காவி நோய் செய்த கருங்கயல் கண் பூங்கொடி - கருங்குவளையை வருந்திய கரிய கயற்கண்களை யுடையதொரு பூங்கொடியை; என் ஆவி நோய் செய்த அணங்கு - என் உயிரை வருத்திய தெய்வமங்கை ; என்று அறியாதேன்-என்றுரைத்து அறிவுகலங்கினேனை; மேவி நோய் தீர வினாத் தருவார் இல்லை - நெருங்கி நோய் நீங்க என்னுற்றனை என்று வினவுவார் இல்லையே!

   (வி - ம்.) கயற்கண் : பெயர். 'கொடியைத் தெய்வமென்றே கருதி நறுங்குழலாளாக உணராமற் பின்னும் மயங்கினேனை' என உரைப்பர் நச்சினார்க்கினியர்.

( 79 )
1968 தெண்ணீர்ப் பனிக்கயத்து மட்டவிழ்ந்த தேங்குவளைக்
கண்ணீர்மை காட்டிக் கடல்போ லகன்றவென்
னுண்ணீர்மை யெல்லா மொருநோக்கி னிற்கவர்ந்த
பெண்ணீர்மை மேனாட் பிறந்து மறியுமோ.