பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1144 

2030 மட்டுவிரி கோதைமது வார்குழலி னாடன்
பட்டுநிணர் கட்டில்பரி வின்றியுறை கென்றா
ளிட்டவணை மேலினிது மெல்லெனவ சைந்தான்
கட்டழல்செய் காமக்கட லைக்கடைய லுற்றான்.

   (இ - ள்.) மட்டுவிரி கோதை மதுவார் குழலினாள் - மகரந்தம் மிகுந்த கோதையையுடைய தேன்வாருங் கூந்தலாள்; தன் பட்டு நிணர் கட்டில் பரிவு இன்றி உறைக என்றாள் - தன்னுடைய பட்டுக்கச்சால் பிணிக்கப்பட்ட கட்டிலிலே வருத்தமின்றித் தங்குக என்றாள்; கட்டழல் செய் காமக்கடலைக் கடையலுற்றான் - கொடிய நெருப்பைப் போன்ற அலைவின்றி நின்ற காமக்கடலைக் கடையத் தொடங்கினவன்; இட்ட அணைமேல் இனிது மெல் என அசைந்தான் - தனக்கிட்ட பள்ளியின்மேல் மெல் என இனிதாகக் களைப்பாறினான்.

   (வி - ம்.) நிணர்கட்டில் : வினைத்தொகை. இது நிண என்றே வரும் : ஈண்டு, அண, அணர் என்று வந்தாற்போன்று ரகரமெய் பெற்று வந்தது. நிணத்தல் - பின்னுதல். அசைந்தான் : வினயாலணையும் பெயர்.

( 36 )
2031 காலையொடு தாழ்ந்துகதிர் பட்டதுக லங்கி
மாலையொடு வந்துமதி தோன்றமகிழ் தோன்றி
வேலனைய கண்ணியர்தம் வீழ்துணைவர் திண்டோள்
கோலமுலை யாலெழுதக் கூடியதை யன்றே.

   (இ - ள்.) கதிர் காலையொடு தாழ்ந்து கலங்கிப்பட்டது - ஞாயிறு பகற்பொழுதுடன் மேற்றிசையிலே வீழ்ந்து கலங்கிப் பட்டது; மாலையொடு மதி வந்து தோன்ற - பிறகு, மாலைக் காலத்தோடே திங்கள் வந்து தோன்றலின்; வேலனைய கண்ணியர் மகிழ்தோன்றி - வேல் போன்ற கண்ணினர் களிப்புத் தோன்றி; தம்வீழ் துணைவர் திண்தோள் - தாம் விரும்பிய கணவரின் திண்ணிய தோளை; கோலமுலையால் எழுதக் கூடியது - அழகிய முலைகளால் எழுதுமாறு இராப்பொழுது வந்து சேர்ந்தது.

   (வி - ம்.) கூடியதை : ஐ : அசை.

   காலை - பகல் என்னும் பொருட்டாய் நின்றது. கதிர் காலையொடு தாழ்ந்துபட்டது என மாறுக. கதிர் - ஞாயிறு. மகிழ் - மகிழ்ச்சி. அன்று. ஏ : அசைகள்.

( 37 )
2032 ஏந்துமலர்ச் சேக்கையகில் வளர்த்தவிடு புகையு
மாய்ந்தமலர்க் கோதையமிர் துயிர்க்குநறும் புகையுங்
கூந்தலகிற் புகையுந்துகிற் கொழுமெனறும் புகையும்
வாய்ந்தவரை மழையினுயர் மாடத்தெழுந் தனவே.