பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 115 

208 கைம்மலர்க் காந்தள் வேலிக் கணமலை யரையன் மங்கை
மைம்மலர்க் கோதை பாகங் கொண்டதே மறுவ தாகக்
கொய்ம்மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணியாற்குப்
பெய்ம்மல ரலங்கல் மார்ப பெரும்பழி யாயிற் றன்றே.

   (இ - ள்.) பெய்ம்மலர் அலங்கல் மார்ப - மலரால் தொடுத்த மாலை மார்பனே! ; கைம்மலர்க் காந்தள்வேலிக் கணமலை அரையன் மங்கை மைம்மலர்க் கோதை - கைபோல மலரும் காந்தள் வேலியையுடைய, தொகுதியாகவுள்ள மலைகளுக்கரசன் மனைவி மேனைபெற்ற, நீலமலராற் செய்த கோதையணிந்த இறைவியை; பாகம் கொண்டதே மறுவதுஆக - இடப்பக்கத்தில் வைத்ததே மறுவுடைய தொன்றாக; கொய்ம்மலர்க் கொன்றைமாலைக் குளிர்மதிக் கண்ணியாற்கு - கொய்த மலராலாகிய கொன்றை மாலையையும் குளிர்ந்த பிறைக்கண்ணியையும் உடைய இறைவனுக்கு; பெரும்பழி ஆயிற்று அன்றே - பெரிய பழியாக முடிந்தது அல்லவோ?

 

   (வி - ம்.) மைம்மலர்க் கோதை - நீலமலராற் செய்த கோதை; இறைவி : ஆகுபெயர். மாலை - அடையாளப் பூ. கண்ணி - சூடும்பூ. 1.'கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே' (தொல். மரபு. 19) என்றார்.

 

   மலையரையன் மங்கை : மேனை. மலர்க்கோதை : பார்ப்பதி. மதிக்கண்ணியான்: சிவன்.

( 179 )
209 நீனிற வண்ண னன்று நெடுந்துகில் கவர்ந்து தம்முன்
பானிற வண்ண னோக்கிற் பழியுடைத் தென்று கண்டாய்
வேனிறத் தானை வேந்தே விரிபுனற் றொழுனை யாற்றுட்
கோனிற வளையி னார்க்குக் குருந்தவ னொசித்த தென்றான்.

   (இ - ள்.) வேல் நிறம் தானை வேந்தே - வேலின் விளக்கமுறு படையையுடைய மன்னனே!; அன்று நீல்நிறம் வண்ணன் நெடுந்துகில் கவர்ந்து - முற்காலத்தில் நீலநிறமுடைய கண்ணன் பல துகில்களைக் கவர்ந்து; தம்முன் பால்நிறம் வண்ணன் நோக்கிற் பழியுடைத்து என்று - தன் முன்னவனாகிய பலதேவன் பார்த்தாற் பழிவரும் என்று எண்ணி ; விரிபுனல் தொழுனை, ஆற்றுள் கோல்நிற வளையினார்க்கு அவன் குருந்து ஒசித்தது என்றான் - பரவிய நீரையுடைய யமுனையாற்றிலே நீராடிய, திரண்ட ஒளி மிகும் வளையினை யணிந்த ஆய்ச்சியருக்குக் கண்ணன் குருந்தை ஒடித்தது என்றான்.

 

   (வி - ம்.) வேனிறம் - வேலினது விளக்கம். கோல் - திரட்சி. ஒசித்தது : மறைந்தது என்றுங் கூறுவர்.

 

1. கண்ணி கார்நறுங் கொன்றை காமர் - வண்ண மார்பிற் றாருங்கொன்றை (புறநா. கடவுள் வாழ்த்து.)