பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1280 

2268 தூசுலாம் பரவை யல்குற்
  றுணைமுலை மகளி ராடு
மூசல்போற் சேனை யோடப்
  பதுமுகன் களிற்றை யுந்தி
மாசில்சீர் மழையி னெற்றி
  மாமதி நுழைவ தேபோற்
காய்சினக் களிற்றி னெற்றி
  யாழிகொண் டழுத்தி னானே.

   (இ - ள்.) தூசு உலாம் பரவை அல்குல் - ஆடை உலவும் பரவிய அல்குலையும்; துணைமுலை மகளிர் ஆடும்-இணை முலைகளையுமுடைய மங்கையர் ஆடுகின்ற; ஊசல்போல் சேனைஓட - ஊசலைப்போற் சேனை ஒடுதலைப் (பொறாத); பதுமுகன் களிற்றை உந்தி - பதுமுகன் தன் யானையைச் செலுத்தி; மாசுஇல் சீர் மழையின் நெற்றிமாமதி நுழைவதேபோல் - குற்றமற்ற சிறப்பினையுடைய முகிலின் உச்சியிலே பெரிய திங்கள் நுழைதலைப்போல; காய் சினக் களிற்றின் நெற்றி - காமுகனூர்ந்த சினமிக்க யானையின் நெற்றியிலே; ஆழிகொண்டு அழுத்தினான் - தன் ஆழியைக் கையில் ஏந்தி அழுத்தினான்.

   (வி - ம்.) கெட்ட படை மீண்டும் வந்து பொருது கெடுதலின் ஊசலோடு உவமித்தார்.

( 167 )
2269 பெருவலி யதனை நோனான்
  பிண்டிபா லத்தை யேந்தி
யருவரை நெற்றிப் பாய்ந்த
  வாய்மயிற் றோகை போலச்
சொரிமதக் களிற்றின் கும்பத்
  தழுத்தலிற் றோன்றல் சீறிக்
கருவலித் தடக்கை வாளிற்
  காளையை வெளவி னானே.

   (இ - ள்.) பெருவலி அதனை நோனான் - பேராற்றலுடைய காமுகன் அதனைப் பொறாமல்; பிண்டி பாலத்தை ஏந்தி - பிண்டி பாலம் என்னும் படையை எடுத்து; அருவரை நெற்றி பாய்ந்த ஆய் தோகைமயில் போல - பெரிய மலைமீது பாய்ந்த அழகிய தோகையையுடைய மயில்போல; சொரிமதக் களிற்றின் கும்பத் தழுத்தலின் - (பதுமுகனுடைய) மதம் பொழியும் களிற்றின் தலையிலே அழுத்தியதால்; தோன்றல் சீறி - பதுமுகன் சீறி; கருவலித் தடக்கை வாளின் காளையை வெளவினான் - பெருவலியுடைய கையிலேந்திய வாளாற் காமுகனை வெட்டினான்.