பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 130 

   (வி - ம்.) பாட்டு ஆரோசையாலே மெல்ல மெல்ல உயர்ந்து செல்லுமாறுபோல என்க. இதனால் அமரோசைபோல மெல்ல இறக்கி என்பதும் கொள்க.

( 209 )

வேறு

 
239 பண்டவழ் விரலிற் பாவை பொறிவலந் திரிப்பப் பொங்கி
விண்டவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பறக்கும் வெய்ய
புண்டவழ் வேற்கட் பாவை பொறியிடந் திரிப்பத் தோகை
கண்டவர் மருள வீழ்ந்து கால்குவித் திருக்கு மன்றே.

   (இ - ள்.) கண்டவர் மருளப் பாவை பண்தவழ் விரலின் பொறிவலம் திரிப்ப - பார்த்தவர் மயங்குமாறு விசயை யாழ் நரம்பில் தவழும் தன் விரல்களாற் பொறியை வலத்தே திரிப்ப; பொங்கி விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பிடைப் பறக்கும் - எழும்பி வானில் உலவும் முகிலைப் பிளந்து வானிலே பறக்கும்; புண்தவழ் வெய்ய வேற்கண் பாவை பொறிஇடம் திரிப்ப - பகைவர்க்குப் புண்ணுண்டாதற்குக் காரணமான வேலனைய கண்ணாள் பொறியை இடத்தே திரிப்ப; தோகை வீழ்ந்து கால் குவித்திருக்கும் - அம் மயில் வீழ்ந்து காலைக் குவித்திருக்கும்.

 

   (வி - ம்.) கால் பரப்பிற் கெடும்.

 

   பண் : யாழ் நரம்பிற்கு ஆகுபெயர். பாவை : விசயை.

( 210 )

வேறு

 
240 காதி வேல்வல கட்டியங் காரனு
நீதி யானிலங் கொண்டபி னீதிநூ
லோதி னார்தமை வேறுகொண் டோதினான்
கோது செய்குணக் கோதினுட் கோதனான்.

   (இ - ள்.) காதி வேல்வல கட்டியங்காரனும் நீதியால் நிலம்கொண்ட பின் - பொருது வேலை எறிவதில் வல்ல கட்டியங்காரனும் முறையால் அரசன் கொடுப்பத் தான் நிலத்தை அடிப்படுத்திய பிறகு; நீதிநூல் ஓதினார்தமை வேறுகொண்டு - அறநூல் உணர்ந்தோரை யெல்லாம் தனக்கு வேறாகக்கொண்டு; கோதுசெய் குணக் கோதினுட் கோதனான் ஓதினான் - பயனின்றென நூல்களிற் கூறிய குணங்களிலேயும் பயனிலதாகிய செய்ந்நன்றி மறக்கும் குணத்தில் நிற்கின்ற பயனிலாதவன் ஒரு மொழி யுரைத்தான்.

 

   (வி - ம்.) [கட்டியங்காரனும்] : உம்மை இழிவு சிறப்பு. கோது செய் குணக்கோது - நூல்கள் பயனின்றாகக் கூறிய குணங்களிற் கோது; அஃதாவது செய்ந்நன்றிக்கேடு; உட்கோதனான் - அதிலே நிற்கின்ற