பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1400 

   (வி - ம்.) 'அவன் புணர்தலால், கிண்கிணியும் சிலம்பும் உடனே பூசலிட்டன. அப்போது அவள் புணர்தலால் மேகலையும் வருத்தம் விளைத்தாள் என்பனபோல அவற்றுடனே பூசலிட்டன' என்பர் நச்சினார்க்கினியர்.

( 104 )
2482 ஏந்தி நாங்களுட னேயிடு பூசலை
வேந்தர் வேந்தன் கொடுங்கோ லினனாகி
யாய்ந்து கேட்டு மருளானென் றவிந்தன
சாந்த மேந்துமுலை யாள்கலந் தாமே.

   (இ - ள்.) நாங்கள் உடனே ஏந்தி இடு பூசலை - (இவள் வருந்துவாள் என்று) நாங்கள் உடனே எடுத்து இடும் பூசலை; வேந்தர் வேந்தன் கேட்டும் கொடுங் கோலினன் ஆகி ஆய்ந்து அருளான் - அரசர்க் கரசன் கேட்டும் கொடுங்கோலினனாகி, ஆராய்ந்து அருளான்; என்று - என்று கருதினாற் போல; சாந்தம் ஏந்தும் முலையாள் கலம் தாம் அவிந்தன - சந்தனம் ஏந்திய முலையாளின் கலங்கள் ஒலி அவிந்தன.

   (வி - ம்.) இரண்டு காலத்தும் அவட்கே ஒலித்தலின் 'அவள்கலம்' என்றார்.

   நாங்கள் உடனே ஏந்தியிடு பூசலை என மாறுக. ஏந்தி - எடுத்து. வேந்தன் - சீவகன். கேட்டும் என்புழி - உம்மை இழிவு சிறப்பு. தாம். ஏ : அசைகள்.

( 105 )

வேறு

2483 வீடுமலி யுலகினவர் போலவிளை யாடுந்
தோடுமலி கோதையொடு துதைந்தவரை மின்போ
லாடுகொடி யணிந்தவுய ரலங்கல்வரை மார்பன்
கூடுமயிர் களையும்வகை கூறலுறு கின்றேன்.

   (இ - ள்.) வீடுமலி உலகினவர்போல - வீடு பெறுதற்குக் காரணமான துறக்கத்தினவர்போல; விளையாடும் - இன்ப விளையாட்டிலே ஈடுபட்ட; தோடுமலி கோதையொடு - இதழ் நிறைந்த கோதையணிந்த இலக்கணையுடன்; துதைந்த வரை மின்போல் ஆடுகொடி அணிந்த உயர் அலங்கல் வரை மார்பன் - நெருங்கிய மலையிலே மின்னற் கொடிபோல அசையும் கொடி யணிதற்குக் காரணமான, உயர்ந்த மாலையைத் தனக்கென வரைந்த மார்பன்; கூடு மயிர்களையும் வகை கூறல் உறுகின்றேன் - கூடுவதொரு மயிர் களையுஞ் சடங்கினைக் கூறலுறுகின்றேன்.

   (வி - ம்.) அதிகார தேவர்கள் அதிகார முடிவிற் கற்பம் அறுதியாக இருந்து முத்தி எய்துவரென்பதனால், உலகமென்றது வீடுபெறுதற்குக் காரணமான துறக்கம் எனப்பட்டது. இனி, வீடுமலி உலகினவர் :