பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1408 

பஞ்சிப் பட்டொடு துரூஉக்கிழி நீக்கிப்
பைங்கதிர் அவிர்மதிப் பாகத் தன்ன
அங்கேழ்க் கன்மிசை அறிந்துவாய் தீட்டி
வெங்கேழ்த் துகின்மிசை விதியுளி புரட்டிச்
செங்கேழ்க் கையிற் சிறந்துபா ராட்டி
ஆசறு நறுநீர் பூசனை கொளீஇ.”(2 4 : 164 71)

   எனவரும் பெருங்கதையினை ஒப்புநோக்குக.

( 119 )

வேறு

2497 ஏற்றி யும்மிழித் தும்மிடை யொற்றியும்
போற்றிச் சந்தனம் பூசுகின் றானெனக்
கூற்ற னான்முகங் கோலஞ்செய் தான்கடற்
றோற்றுஞ் செஞ்சுடர் போலச் சுடர்ந்ததே.

   (இ - ள்.) ஏற்றியும் - ஏற ஒதுக்கியும்; இழித்தும் - இழிய ஒதுக்கியும்; இடை ஒற்றியும் - நடுவு திறந்தும்; சந்தனம் போற்றிப் பூசுகின்றான் என - சந்தனத்தைப் போற்றிப் பூசுகின்றவன்போல; கூற்றுஅனான் முகம் கோலம் செய்தான் - கூற்றுவனைப் போன்ற அரசன் முகத்தை அழகு செய்தான் ; கடல் தோற்றும் செஞ்சுடர் போலச் சுடர்ந்தது - அது கடலிலே தோன்றும் செஞ்ஞாயிறுபோல விளங்கிற்று.

   (வி - ம்.) ஏற்றுதல் - ஏற வொதுக்குதல். இழித்தல் - மயிரைத் தாழ ஒதுக்குதல். கூற்றனான் : சீவகன். செஞ்சுடர் - ஞாயிற்று மண்டிலம்.

( 120 )
2498 கோதைப் பாரத்தி னானுந்தன் னாணினு
மேதி லான்முக நோக்கு மிளிவினும்
பாத நோக்கிய பான்மதி வாண்முக
மேதமின்றி யெடுத்தனள் மெல்லவே.

   (இ - ள்.) கோதைப் பாரத்தினானும் - மாலையின் சுமையாலும்; தன் நாணினும் - (இயல்பாகவுள்ள) தன் நாணத்தினானும்; ஏதிலான் முகம் நோக்கும் இளிவினும் - அயலானான நாவிதன் முகத்தை நோக்குகின்ற இளிவினாலும்; பாதம் நோக்கிய பால்மதி வாள்முகம் - தன் அடியை நோக்கிக் கவிழ்ந்திருந்த வெள்ளிய திங்களனைய முகத்தை; ஏதம் இன்றி மெல்ல எடுத்தனள் - குற்றமில்லாதபடி மெல்ல அவள் எடுத்தாள்.

   (வி - ம்.) கோதைப்பாரம் - மாலையாலாகிய சுமை. தன்னாண் - தனக்கியல்பாயுள்ள நாணம். ஏதிலான் - அயலான்; ஈண்டு நாவிதன். எடுத்தல் - நிமிர்த்துதல்.

( 121 )