பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1414 

   (இ - ள்.) என் ஆவி இற்றது என்னா - என் உயிர் நீங்கியது என்று; எரிமணி இமைக்கும் பஞ்சிச் சிற்றடிப் போது புல்லி - ஒளிரும் மணிகளையுடைய பஞ்சி ஊட்டிய சிற்றடி மலர்களைத் தழுவி; திருமகன் கிடப்ப - சீவகன் கிடக்க; சேந்து பொற்ற தாமரையின் போந்து கருமுத்தம் பொழிபவே போல் - சிவந்து பொலிவுடைய தாமரையினின்றும் புறப்பட்டுக் கரிய தன்மையுடைய முத்துக்கள் சிந்துவன போல; உற்று - ஊடல் தீர்தலைப் பொருந்த; கண்கள் மைகலந்து வெம்பனி உகுத்த - கண்கள் மையைக் கலந்து வெய்யவாகிய பனியை உகுத்தன.

   (வி - ம்.) பொற்ற : பொற்பென்னும் உரிச்சொல் திரிந்தது. பொழிதல் ஈண்டு முத்துக்களின் வினை. ஊடல் முழுதும் தீராமையின் வெம்பனியாயிற்று. உற்று - ஊடல் தீர்தலுற எனத் திரிக்க. 'பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் - என்றபடி சேர்தலும் உண்டு' (கனி. 89) என்றாராகலின், அடியில் வணங்கிய பின்னும் ஊடல் தீராது அழுதாள் என்றல் கற்பிற்குப் பொருந்தாது. 'இளிவே இழவே' (தொல். மெய்ப். 5) என்னும் சூத்திரத்தில் அழுகையாவது அவலமும் கருணையும் ஆதலின், 'கயமலருண் கண்ணாய்' என்னும் (37) கலியில், 'தானுற்றநோயுரைக் கல்லான் பெயரு மன்' ..... 'சேயேன்மன் யானும் துயருழப்பென்' என்ற வழிப் பிறன்கண் தோன்றிய இளிவரல் பொருளாக அவலந் தோன்றினாற் போல, இதனையும் பிறன்கண் தோன்றிய இளிவரல் பொருளாகப் பிறந்த கருணையென்று கொள்க வணங்குதல் : அவற்கு இளிவரவு அதனாற் கருணை பிறந்தது. அழுகை ஈண்டுக் கருணை. இதனால் ஊடல் தீரக் கருதினாளாம்.

( 131 )
2509 கொண்டபூ ணின்னைச் சார்ந்து
  குலாய்க்கொழுந் தீன்ற கொம்பே
கண்டுகண் கரிந்து நீரா
  யுகுவது கரக்க லாமே
பண்டியான் செய்த பாவப்
  பயத்தையார்க் குரைப்பென் றேன்காள்
வண்டுகாள் வருடி நங்கை
  வரந்தர மொழிமி னென்றான்.

   (இ - ள்.) கொண்ட பூண் நின்னைச் சார்ந்து குலாய்க் கொழுந்து ஈன்ற கொம்பே! - நீ அணிந்த அணி நின்னைச் சார்தலாலே குலாவிக் கொழுந்தீனுதற்குக் காரணமான கொம்பே!; கண்டு - நின்னை விடாமற் பார்த்தலாலே; கண் கரிந்து நீராய் உகுவது சுரக்கலாமே - கண் கரிந்து நீராகச் சிந்துவதை நீ அறியாமற் கரத்தல் இயலுமோ?; தேன்காள்! வண்டுகாள்! - தேன்களே! வண்டுகளே!; பண்டுயான் செய்த பாவப்பயத்தை யார்க்கு உரைப்பேன்? - முன்னர் யான் இயற்றிய தீவினையின் பயனை யார்க்குக் கூறுவேன்?; வருடி - (இவள் காலைத்) தடவி;