பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 143 

   (வி - ம்.) [தன் கீழ்]: கீழ்: இடமுமாம். நன்மாந்தர்: இகழ்ச்சி. ஊன்றிய: பெயரெச்சமும்ஆம்.

 

   கோன் - சச்சந்தன். நிகளம் - தளை; விலங்கு. கோட்டம் - ஈண்டுச் சிறைக்கோட்டம். குரங்குதல் - தாழ்தல்

( 233 )
263 பருமித்த களிறு மாவும்
  பரந்திய றேரும் பண்ணித்
திருமிக்க சேனை மூதூர்த்
  தெருவுதொ றெங்கு மீண்டி
யெரிமொய்த்த வாளும் வில்லு
   மிலங்கிலை வேலு மேந்திச்
செருமிக்க வேலி னான்றன்
  றிருநகர் வளைந்த தன்றே.

   (இ - ள்.) பருமித்த களிறும் மாவும் பரந்துஇயல் தேரும் பண்ணி - அணிபுரிந்த களிறும் குதிரையும் பரவிய இயலையுடைய தேரும் தகுதியாக அமைத்துக்கொண்டு; திருமிக்க சேனை- செல்வம்மிக்க படைத்திரள்; எரிமொய்த்த வாளும் வில்லும் இலங்குஇலை வேலும் ஏந்தி - நெருப்பிலே முழுகிய வாளும் வில்லும் விளங்கு இலைமுகமுடைய வேலும் ஏந்திக் கொண்டு; மூதூர் தெருவுதொறும் எங்கும் ஈண்டி - பழமையான நகரின் தெருக்களிலும் பிற இடங்களிலும் திரண்டு; செருமிக்க வேலினான் தன் திருநகர் வளைந்தது - போர்த்தொழிலிற் சிறந்த வேலேந்திய சச்சந்த மன்னனின் அழகிய அரண்மனையைச் சூழ்ந்தது.

 

   (வி - ம்.) உள்நிற்கும் ஊர்திகளும் உட்பட வளைந்து அந்தப் புரத்தினுட் புகுதாது நின்றது கண்டு வாயிலோன் உணர்த்துகின்றமை மேலே கூறுகின்றார்.

( 234 )
264 நீணில மன்ன போற்றி
  நெடுமுடிக் குருசில் போற்றி
பூணணி மார்ப போற்றி
  புண்ணிய வேந்தே போற்றி
கோணினைக் குறித்து வந்தான்
  கட்டியங் கார னென்று
சேணிலத் திறைஞ்சிச் சொன்னான்
  செய்யகோல் வெய்ய சொல்லான்.