பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1444 

   (இ - ள்.) மணிக் கதவம் திறந்த - (அப்போது) மணிகள் இழைத்த கதவுகள் திறந்தன; திசைகள் எல்லாம் அகிற் புகையான் மணம் தேக்கி மறைந்த - எல்லாத் திசைகளும் அகிற் புகையின் மணம் நிறைந்து மறைந்தன; மன்னர் மன்னன் வலம் செய்து - (அவ்வளவில்) அரசர்க்கரசன் வலம் வந்து; பிறவா தாயைப் பெற்றேன் - பிறவாத நின்னைப் புகலடைந்தேன் ஆதலால்; பிறந்தேன் இனிப் பிறவேன் என்று - இதுகாறும் எண்ணிறந்த பிறவிகளிலேயும் பிறந்துழன்றேன், இனிப் பிறவேன் என்றுரைத்து; முடிதுளக்கி இறைஞ்சி ஏத்திக் கையால் தொழுதான் - முடியைத் தாழ்த்தி வணங்கி ஏத்தியவாறு கையால் தொழுதான்.

   (வி - ம்.) ஏத்தி : நிகழ்காலமுணர்த்தியது. அரசன் வருங்காலத்துப்பிறர் புகுதாமற் கதவடைத்து அவனுக்குத் திறத்தல் இயல்பு. அகிற்புகை மணத்தினோடு நிறைதலினாலே திசைகள் மறைந்தன.

( 183 )

வேறு

2561 திருமறு மார்பினை திலகமுக் குடையினை
யருமறை தாங்கிய வந்தணர் தாதையை
யருமறை தாங்கிய வந்தணர் தாதைநின்
னெரிபுரை மரைமல ரிணையடி தொழுதும்.

   (இ - ள்.) திருமறுமார்பினை - திருமகளாகிய மறுவையுடைய மார்பினையுடையாய்; திலகமுக் குடையினை - மேலான முக்குடையுடையாய்; அருமறை தாங்கிய அந்தணர் தாதையை - முதன்மையான அரிய மறையை முற்றக் கற்ற அந்தணர்க்குத் தாதையியல்புடையாய்; அருமறை தாங்கிய அந்தணர் தாதைநின் - அத்தகைய நின்னுடைய; எரிபுரை மரைமலர் இணையடி தொழுதும் - நின்னுடைய, அழலொக்கும் தாமரை மலர் போன்ற இணையடிகளைத் தொழுகின்றோம்.

   (வி - ம்.) 'தொழுதும்' எனும் உளப்பாடு மற்றைய மக்களையும் கருதிற்று. 'உம்மொடு வரூஉம் கடதற' (தொல். வினை. 5) நிகழ்கால முணர்த்தல் காலமயக்கு. எரிபுரைமலரடி என்றார் பிறவியைச்சுடுதலின், அன்றி மலரின் நிறத்திற் காக்கலுமாம்.

( 184 )
2562 உலகுணர் கடவுளை யுருகெழு திறலினை
நிலவிரி கதிரணி நிகரறு நெறியினை
நிலவிரி கதிரணி நிகரறு நெறியைநின்
னலர்கெழு மரைமல ரடியிணை தொழுதும்.

   (இ - ள்.) உலகு உணர் கடவுளை - உலகறியுங் கடவுளியல் புடையாய்; உருகெழு திறலினை - அச்சுறுத்தும் வரம்பிலாற்றல்