பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 148 

அளவினையுடையன; அவற்றுள் எல்லாம் பிறந்தும் ஏதிலம் - அப் பிறப்புக்களிலெல்லாம் பிறந்தும் வேறுபட்டிருந்தோம்; நீங்கிச் செல்லும் அக்கதிகள் தம்முள் சேரலம் - இனியும் பிரிந்து செல்லும் அத்தகைய பிறப்புக்களினும் ஒன்றுபடோம்; சேர்ந்து நின்ற இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே- (ஆகையால்,) இப்போது இவ்வில்லத்துட் கூடியிருந்த இரண்டு நாளைய உறவே உடையோம்; இரங்கல் வேண்டா -(இவ்வுறவைப் பெரிய உறவாக எண்ணி) வருந்தல் வேண்டா.

 

   (வி - ம்.) கடல் மணல் அளவிடப்படாமைக்கு ஒன்று கூறியபடி.

 

   இரண்டுநாள் என்றது சிறுமைக்கு ஒன்று கூறியபடியாம். ”பத்தெட்டுநாட் பயனில்லா வாழ்க்கை” என்றாற்போல.

( 241 )
271 வண்டுமொய்த் தரற்றும் பிண்டி
  வாமனால் வடித்த நுண்ணூ
லுண்டுவைத் தனைய நீயும்
  உணர்விலா நீரை யாகி
விண்டுகண் ணருவி சோர
  விம்முயிர்த் தினையை யாத
லொண்டொடி தகுவ தன்றா
  லொழிகநின் கவலை யென்றான்.

   (இ - ள்.) வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண்ணூல் உண்டு வைத்து அனைய நீயும் - வண்டுகள் மொய்த்து முரலும் அசோகின் நீழலில் எழுந்தருளிய அருகனார் கூறிய நுண்ணிய நூல்களின் பொருளைத் தேக்கி வைத்துள்ள நீயும்; உணர்வுஇலா நீரைஆகி - உணர்வு இல்லாத தன்மையை ஆகி; கண்அருவி விண்டுசோர விம்மு உயிர்த்து - கண்அருவி மிகுந்து பொழிய அழுது பெருமூச்சுவிட்டு; இனையை ஆதல் தகுவது அன்று - இத்தன்மையை அடைவது நன்றன்று; ஒண்தொடி நின்கவலை ஒழிக - ஒளிமிகும் வளையணிந்தவளே! நின் வருத்தத்தை நீங்குக.

 

   (வி - ம்.) தெய்வங்கட்குரிய மலரில் வண்டு மொய்யாதாயினும் அருகன் அருளால் வண்டு மொய்த்தது. நூல் : ஆகுபெயர். அனைய: நெஞ்சறி பொருளைச் சுட்டிய சுட்டு.

 

   வாமன் - அருகக்கடவுள். 'வேதமுதல்வன் ஓதிய வேதத்தொளி' என்பதுபற்றி , வாமனால் வடித்த நுண்ணூல் என்றார். அவை, அங்காகமம், பூர்வாகமம், பகூசுருதியாகமம் என்னும் மூன்றுமாம்.

( 242 )