பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1486 

   (இ - ள்.) மைதிரண்ட வார்குழல்மேல் - கருமை திரண்ட நீண்ட சிகையிலே; வண்டு ஆர்ப்ப மென் மல்லிகை மாலை சூடி - வண்டுகள் முரல மெல்லிய மல்லிகை மாலையை அணிந்து; கை திரண்ட வேல் ஏந்திக் காரிகையார் மருளக் காமன்போற் சென்றார் - காம்பு திரண்ட வேலை ஏந்தியவாறு மங்கையர் மயங்கக் காமனைப்போலச் சென்றவர்கள்; ஐ திரண்டு கண்டம் குரைப்ப - சிலேட்டுமம் திரண்டு கழுத்திலே ஒலியுண்டாக; நெய்திரண்டாற்போல் உமிழ்ந்து - நெய் திரண்டாற்போலக் கோழையை உமிழந்து; ஓர் தண்டு ஊன்றி அறிவின் தள்ளி - ஒரு தண்டை ஆதரவாக ஊன்றி, அறிவிலிருந்து விலகி; நிற்கும் இளமையோ நிலையாதே காண் - நிற்பதற்குக் காரணமான இளமையோ நிலை அற்றது காண்.

   (வி - ம்.) இது சீவகனுக்குக் கூறியது.

   2619 முதல் இச் செய்யுள்வரை அறவுரை கூறினாள்.

   இஃது இளமை நிலையாமை கூறிற்று.

   இனி, மைதிரண்ட வார்குழன்மேல் வண்டார்ப்ப மல்லிகை மென் மாலைசூடிச் சென்ற காரிகையாரும் அக்காரிகையார் மருளக் காமன் போற் சென்றாரும் எனப் பிரித்துக் கூட்டிச் சிலசொல் வருவித்து முடித்தல் இச்செய்யுட்குச் சிறப்பாகும். இங்ஙனம் செய்யாக்கால் அடை மொழிகள் ஒவ்வாமை யுணர்க. ஐ - சிலேத்துமம். குரைப்ப - இரும.

( 28 )

வேறு

2627 என்றலுஞ் சுநந்தை சொல்லு
  மிறைவிதான் கண்ட தையா
நன்றுமஃ தாக வன்றே
  யாயினு மாக யானு
மொன்றினன் றுறப்ப லென்ன
  வொள்ளெரி தவழ்ந்த வெண்ணெய்க்
குன்றுபோல் யாது மின்றிக்
  குழைந்துமெய்ம் மறந்து நின்றான்.

   (இ - ள்.) என்றலும் சுநந்தை சொல்லும் - என்று விசயை கூறிய அளவிலே சுநந்தை கூறுவாள்; ஐயா! - ஐயனே!; இறைவி கண்டது நன்றும் அஃது ஆக - அரசி கருதியது நன்றாயினும் ஆகுக; அன்றே ஆயினும் ஆக - தீதாயினும் ஆகுக; யானும் ஒன்றினன் - யானும் அதனைப் பொருந்தினேன்; துறப்பல் என்ன - (எனவே, இனி) துறவு பூண்பேன் என்றுரைப்ப; ஒள் எரி தவழ்ந்த வெண்ணெய்க் குன்றுபோல் - பெருந் தீ