பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1512 

கூதிர்

வேறு

2675 கூதிர்வந் துலாவலிற் குவவு மென்முலை
வேதுசெய் சாந்தமும் வெய்ய தேறலும்
போதவிழ் மாலையும் புகையுஞ் சுண்ணமுங்
காதலித் தார்கருங் குவளைக் கண்ணினார்.

   (இ - ள்.) கூதிர் வந்து உலாவலின் - (காருக்குப் பின்) கூதிர்க் காலம் வந்து பரத்தலின்; கருங்குவளைக் கண்ணினார் - கரிய குவளை போலுங் கண்களையுடையார்; குவவு மென்முலை வேது செய் சாந்தமும் - திரண்ட மென் முலையை வெம்மை செய்யும் அகிற் சாந்தமும்; வெய்ய தேறலும் - விருப்பமூட்டும் தேறலும்; போது அவில் மாலையும் - மலர் விரிந்த மாலையும்; புகையும் - அகிற் புகையும்; சுண்ணமும் - சுண்ணப் பொடியும்; காதலித்தார் - விரும்பினார்.

   (வி - ம்.) கூதிர்- அறுவகைப் பருவத்துளொன்று. வேது - வெம்மை. தேறல் - கள். புகை - நறுமணப்புகை.

( 77 )
2676 சுரும்புநின் றறாமலர்த் தொங்க லார்கவி
னரும்புகின் றார்கட லமிர்த மேயெனா
விரும்புகின் றானிள வேனில் வேந்தனைஞ்
சரங்கள்சென் றழுத்தலிற் றரணி மன்னனே.

   (இ - ள்.) இளவேனில் வேந்தன் ஐஞ்சரங்கள் சென்று அழுத்தலின் - இளவேனிலின் அரசனாகிய காமனுடைய ஐங்கணைகளும் சென்று அழுத்துதலின்; தரணி மன்னன் - உலக காவலன்; சுரும்பு நின்று அறாமலர்த் தொடஙகலார் - வண்டுகள் மாறாது முரலும் மலர் மாலையாராகிய; கவின் அரும்புகின்றார் - அழகு மலர்ந்தவர்களை (அக் காலத்துக்கு வேண்டும் பொருள்களை அவர்களிருக்குமிடத்திற் கொண்டு கொடுத்து); கடல் அமிர்தமே எனா விரும்புகின்றான் - கடலின் அமிர்தமே என்று கருதி விரும்பி நுகர்வானாயினான்.

   (வி - ம்.) சுரும்பு - வண்டு. அரும்புகின்றார்: வினையாலணையும் பெயர். எனா - என்று. வேனில் வேந்தன் : காமன். சரங்கள் - அம்புகள், மன்னன் : சீவகன்.

( 78 )
2677 குழைமுக மிடவயிற் கோட்டி யேந்திய
வழனிறத் தேறலுண் மதிகண் டையென
நிழன்முகப் பகைகெடப் பருகி நீள்விசும்
புலலெனா நோக்குவாண் மதிகண்டூடினாள்.