பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1530 

   (இ - ள்.) ஐயன்மார்கள் - அக்குழந்தைகள்; ஐயாண்டு எய்தி - ஐந்து வயது நிறைந்து; மை ஆடி - மை ஓலை பிடித்து ; கலைகள் அறிந்தார் - கலைகளைக் கற்றார்; படை நவின்றார் - படைக்கலம் பயின்றார்; கொய் பூ மாலை - கொய்த மலர் மாலையும்; குழல் - சிகையும்; மின்னும் கொழும்பொன் தோடும் - ஒளிர்கின்ற சிறந்த பொன்னாலான தோடும் ; குண்டலமும் - குண்டலமும்; துளக்கின்றி - அசையாமல்; ஆலும் கலிமா வெகுண்டு ஊர்ந்தார் - அசையும் மனம் செருக்கிய குதிரைகளை வெகுண்டு செலுத்தினார்; மொய் ஆர் அலங்கல் மார்பற்கு முப்பது ஆகிநிறைந்தது - (அப்போது) மலர் நெருங்கிய மாலையணிந்த சீவகவேந்தனுக்கு முப்பதாண்டாகிய நிறைவுற்றது.

   (வி - ம்.) வெகுண்டு ஊர்ந்தார் - அடித்துச் செலுத்தினார். மாலை முதலியன அசையாமல் ஊர்தல் அரிது

   நிறைந்ததென்றது, அரசவுரிமை நிகழ்த்தின யாண்டு முப்பதும் முன்னர்க் கழிந்த யாண்டு பதினைந்தும் ஆக நாற்பத்தையாண்டு சென்றமையின், இல்லறத்திற்குரிய காலம் முற்றுப் பெற்ற தென்றவாறு. இனி, துறவறத்தின் மேல் உள்ளம் நிகழ்தற்குக் காரணம் கூறுகிறார்.

( 108 )

5.சோலை நுகர்வு

2707 பூநிறை செய்த செம்பொற்
  கோடிகம் புரையு மல்குல்
வீநிறை கொடிய னாரும்
  வேந்தனு மிருந்த போழ்திற்
றூநிறத் துகிலின் மூடிப்
  படலிகை கொண்டு வாழ்த்தி
மாநிறத் தளிர்நன் மேனி
  மல்லிகை மாலை சொன்னாள்.

   (இ - ள்.) பூ நிறை செய்த செம்பொன் கோடிகம் புரையும் அல்குல் - மலர் நிறைந்த பொன்னாலான பூந்தட்டைப்போன்ற அல்குலையுடைய; வீ நிறை கொடியனாரும் - மலர் நிறைந்த கொடிகளைப்போன்ற அரசியரும்; வேந்தனும் இருந்த போழ்தில் - அரசனும் வீற்றிருக்கும்போது; படலிகை தூநிறத் துகிலின் மூடிக்கொண்டு வாழ்த்தி - பூவிடு பெட்டியைத் தூய நிறமுடைய ஆடையாலே மூடிக் கையிலே கொண்டு அரசனை வாழ்த்தி; மாநிறத் தளிர் நல் மேனி மல்லிகை மாலை சொன்னாள் - மாந்தளிர்போன்ற மேனியையுடைய மல்லிகைமாலை கூறினாள்.