பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1548 

   (வி - ம்.) வறைகள் - வறுவல்கள். குய்வளம் - தாளிப்பு வளம். ஐவருள் ஒருவன் - பாண்டவர் ஐவருள் ஒருவனாகிய வீமசேனன். ”காவெரி யூட்டிய கவர்கணைத்தூணிப், பூவிரி கச்சைப் புகழோன் தன்முன், பனி வரை மார்பன் பயந்த நுண்பொருட் பனுவல்” என்றார் சிறுபாணினும் (238 - 41). இவன் மடையனுக்குவமை.

( 137 )
2736 கைப்பொடி சாந்த மேந்திக்
  கரகநீர் விதியிற் பூசி
மைப்படு மழைக்க ணல்லார்
  மணிச்செப்பின் வாச நீட்டச்
செப்படு பஞ்ச வாசந்
  திசையெலாங் கமழ வாய்க்கொண்
டொப்புடை யுறுவர் கோயில்
  வணங்குது மெழுக வென்றான்.

   (இ - ள்.) கைப்பொடி சாந்தம் ஏந்தி - முன்னர்ப் பொடியையும் பின்னர்ச் சந்தனத்தையும் தன் கையிலே வாங்கி; கரகநீர் விதியிற் பூசி - கரக நீரிலே முறைப்படி கையையும் வாயையும் கழுவி; மைப்படு மழைக்கண் நல்லார் வாசம் மணிச் செப்பின் நீட்ட - மைதீட்டிய மழைக்கண் நங்கையர் முகவாசத்தை மணிச்செப்பிலே நீட்ட; செப்பு அடு பஞ்ச வாசம் திசை எலாம் கமழ வாய்க்கொண்டு - சொல்லுதற்கரிய அப் பஞ்சவாசத்தைத் திக்கெலாம் மணக்க வாயிற் கொண்டு; ஒப்பு உடை உறுவர் கோயில் வணங்குதும் எழுக என்றான் - தனக்குத்தானே உவமையான அருகன் கோயிலை வணங்குவோம் எழுக என்று பணித்தான்.

   (வி - ம்.) 'செப்படும் ஒப்புடைக் கோயில்' எனக் கூட்டிச் 'செப்பினைத் தன்னோடு உவமிக்கும் அளவில், அதனைக் கெடுக்கும் ஒப்பினையுடைய கோயில்' என்று பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர்.

   உறுவர் - எல்லாத் தேவரினும் மிக்கவர். உறு - மிகுதி.

( 138 )

6. அறிவர் சிறப்பு

2737 ஒருபகல் பூசி னோராண்
  டொழிவின்றி விடாது நாறும்
பெரியவர் கேண்மை போலும்
  பெறற்கரும் வாச வெண்ணெ
யரிவையர் பூசி யாடி
  யகிற்புகை யாவி யூட்டித்
திருவிழை துகிலும் பூணுந்
  திறப்படத் தாங்கி னாரே.