பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1549 

   (இ - ள்.) அரிவையர் - (அதுகேட்ட) மாதர்கள்; ஒரு பகல் பூசின் ஓர் ஆண்டு ஒழிவின்றி விடாது நாறும் - ஒருவேளை பூசினால் ஓராண்டுவரையும் விடாமல் எப்போதும் மணக்கும்; பெரியவர் கேண்மை போலும் - உயர்ந்தோர் நட்பை ஒக்கும்; பெறற்கு அரும் வாச எண்ணெய் - கிடைத்தற்கரிய மணமிகும் எண்ணெயை; பூசி ஆடி - தேய்த்துக் குளித்து; அகிற் புகை ஆவி ஊட்டி - அகிலின் புகையாலே மணமூட்டி; திருவிழை துகிலும் பூணும் - திருமகளும் விரும்பும் ஆடையும் அணியும்; திறம்படத் தாங்கினார் - வகையுற அணிந்தனர்.

   (வி - ம்.) 'ஓராண்டும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது; அஃது எக்காலமும் என்னும் பொருளது.

   இதனோடு,

”மென்மையு நேயமு நன்மையு நாற்றமும்
ஒருநாட் பூசினும் ஓரியாண்டு விடாஅத்
திருமா ணுறுப்பிற்குச் சீர்நிறை யமைத்துக்
கரும வித்தகர் கைபுனைந் தியற்றிய
வாச வெண்ணெய் பூசினர்போற்றி”. (2 - 5 : 97 - 101)

   எனவரும் பெருங்கதை ஒப்புக்காணற்பாலது.

( 139 )
2738 நற்றவஞ் செய்த வீர
  ருளவழி நயத்து நாடும்
பொற்றதா மரையி னாளிற்
  பூஞ்சிகை முத்த மின்னக்
கொற்றவற் றொழுது சோ்ந்தார்
  கொம்பனார் வாமன் கோயின்
மற்றவன் மகிழ்ந்து புக்கு
  மணிமுடி துளக்கி னானே.

   (இ - ள்.) நல்தவம் செய்த வீரர் உளவழி நயந்து நாடும் - நல்ல தவம்புரிந்த வீரர்கள் இருக்குமிடத்தை விரும்பி அவரிருக்குமிடத்தை நாடிச் செல்லுகின்ற; பொற்ற தாமரையினாளின் - பொற்றாமரையாளைப் போல; பூஞ்சிகை முத்தம் மின்ன - பூங்குழலிலே முத்துக்கள் ஒளிவீச; கொம்பனார் - அம்மலர்க் கொம்பு போன்ற மங்கையர்; கொற்றவன் தொழுது சேர்ந்தார் - அரசனை வணங்கிச் சேர்த்தனர்; அவன் வாமன் கோயில் மகிழ்ந்து புக்கு - (பின்னர்) அரசன் அருகன் கோயிலை மகிழ்வுடன் அடைந்து; மணிமுடி துளக்கினான் - மணியிழைத்த முடியால் வணங்கினான்.