பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1557 

   (வி - ம்.) இத்துணையும், மக்கள் யாக்கை பெறுதற்கருமையும், அது பெற்றாலும் நன்னிலமும் நற்குலமும் நல்வடிவும் நல்லறமும் பெறுதற் கருமையுங்கூறி, இனி, பெறுதற்கரிய பேறுபெற்றுச் சிறப்புற்றுப் பல்லோரானும் நன்கு மதித்துப் புகழப்பெற்ற அவ்வியாக்கை நிலைபெறா தொழியுந் தன்மை கூறுகின்றார்.

   இது வீடுபேறு நல்லொழுக்கம் இன்றியமையாது என்றது.

( 155 )

9. நிலையாமை

2754 இன்ன தன்மையி னருமையி
  னெய்திய பொழுதே
பொன்னும் வெள்ளியும் புணர்ந்தென
  வயிற்றகம் பொருந்தி
மின்னு மொக்குளு மெனநனி
  வீயினும் வீயும்
பின்னை வெண்ணெயிற் றிரண்டபின்
  பிழைக்கவும் பெறுமே.

   (இ - ள்.) இன்ன தன்மையின் அருமையின் - இங்குக் கூறிய நால்வகைத் தன்மையினும் மக்கட்குக் குறித்த ஆயுள் நிலைபெறுதல் அரிதாகையாலே; பொன்னும் வெள்ளியும் புணர்ந்தென வயிற்றகம் பொருந்தி எய்திய பொழுதே - பொன்னும் வெள்ளியும் கலந்தாற்போலச் சுரோணிதமும் சுக்கிலமும் வயிற்றகத்திலே சேர்ந்து மக்கள் யாக்கை எடுத்தற்கு எய்திய போதே; மின்னும் மொக்குளும் என நனி வீயினும் வீயும் - மின்னும் மொக்குளும் தோன்றிக் கெடுமாறு போல உடனே கெடினும் கெடும்; பின்னை வெண்ணெயின் திரண்டபின் பிழைக்கவும் பெறும் - பிறகு வெண்ணெய் போல் திரண்ட பின்னர்க் கெடவும் பெறும்.

   (வி - ம்.) ஈண்டு, “நிலையாமையாவது தோற்றமுடையன யாவும் நிலையுதலிலவாந் தன்மை. மயங்கிய வழிப் பேய்த்தேரிற் புனல்போலத் தோன்றி மெய்யுணர்ந்தவழிக் கயிற்றிலரவுபோலக் கெடுதலிற் பொய்யென்பாரும், நிலைவேறுபட்டு வருதலாற் கணந்தோறும் பிறந்திறக்கும் என்பாரும், ஒருவாற்றான் வேறுபடுதலும், ஒருவாற்றான் வேறுபடாமையு முடைமையின் நிலையுதலும் நிலையாமையும் ஒருங்கேயுடைய வென்பாரும் எனப் பொருட்பெற்றி கூறுவார் பலதிறத்தராவர்; எல்லார்க்கும் அவற்றது நிலையாமை உடம்பாடாகலின் ஈண்டு அதனையே கூறுகின்றார். இஃதுணர்ந்துழி யல்லது பொருளிகளிற் பற்றுவிடாதாகலின் இது மன் வைக்கப்பட்டது“ எனவரும் பரிமேலழகர் மெய்ம்மொழி நினையற்பாலது, (திருக்குறள், 34 - நிலையாமை முன்னுரை)

( 156 )