பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1558 

2755 வெண்ணெ யாயது வீங்குபு கூன்புற யாமை
வண்ண மெய்தலும் வழுக்கவும் பெறுமது வழுக்கா
தொண்மை வாண்மதி யுருவொடு திருவெனத் தோன்றிக்
கண்ண னாரழக் கவிழினுங் கவிழுமற் றறிநீ.

   (இ - ள்.) வெண்ணெய் ஆயாது வீங்குபு கூன்புற யாமை வண்ணம் எய்தலும் வழுக்கவும் பெறும் - வெண்ணெய்போலத் திரண்ட அப்பிண்டம் பருத்து வளைந்த முதுகையுடைய யாமையின் தன்மையை அடைந்தவுடன் கெடவும் பெறும்; அது வழுக்காது ஒண்மை வாள் மதி உருவொடு திருவெனத் தோன்றி - அந்த யாமையின் நிலையிற் கெடாமல் ஒள்ளிய விளக்கமுற்ற திங்களைப்போலும் குறையா உருவுடனே அழகாகப் பிறந்து; கண்ணனார் அழக் கவிழினும் கவிழும் - கண்போலச் சிறந்த பெற்றோர் முதலானார் அழக்கெடினும் கெடும்; நீ அறி - இதனை நீ அறிக.

   (வி - ம்.) மற்று : வினைமாற்று. முன்னிரு திங்களிற் பொன்னும் வெள்ளியும் போன்றும், பின்னிரு திங்களில் வெண்ணெய் போன்றும், ஐந்தாந் திங்களில் ஆமை போன்றும், ஆறாந் திங்களில் உருத்தெளிந்தும் பிறக்கும் என்றார்.

   வீங்குபு - பருத்து. புறம் - முதுகு. வண்ணம் - ஈண்டு வடிவம். வழுக்குதல் - அழிதல். கண்ணனார் என்றது தாய் முதலிய சுற்றத்தாரை.

( 157 )
2756 அழித லின்றியங் கருநிதி யிரவலர்க் கார்த்தி
முழுதும் போ்பெறு மெல்லையுண் முரியினு முரியும்
வழுவில் பொய்கையுண் மலரென வளர்ந்துமை யாடிக்
கெழீஇயி னாரொடுங் கிளையழக் கெடுதலுங் கெடுமே.

   (இ - ள்.) அங்கு அழிதல் இன்றி அருநிதி முழுதும் இரவலர்க்கு ஆர்த்தி - அப்போது அழியாமல் அரிய செல்வத்தை இரவலர்க்கு முற்றும் நிறைவித்து; பேர் பெறும் எல்லையுள் முரியினும் முரியும் - பெயர் இடும் அளவிலே இறந்தாலும் இறக்கும்; வழுஇல் பொய்கையுள் மலர் என வளர்ந்து - (அப்போது) கெடாமற், பொய்கையிலே மலர் போல வளர்ந்து ; மை ஆடி - எழுத்தோலை பிடித்து; கெழீஇயினாரொடும் கிளை அழக்கெடுதலும் கெடும் - நெருங்கியவருடன் உறவினர் அழக் கெட்டாலும் கெடும்.

   (வி - ம்.) மகப்பேறு எய்திய மகிழ்ச்சியால் ஈன்றோர் இரவலர்க்கு ஆர்த்தி என்றவாறு. மையாடி - மையோலை பிடித்து, பள்ளியில் பயின்று - கெழீஇயினார் : தோழர்.

( 158 )