பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1591 

அடியை வணங்கி; தெளியும் பொருள்கள் - தெளிகின்ற பொருள்கள்; ஓரைந்தும் அன்றி ஆறும் ஒன்பானும் ஆகும் என்பார் அறவோர் - ஐந்தும் ஆறும் ஒன்பதும் என்று அறவோர் உரைப்பர்.

   (வி - ம்.) ஐந்து : சீவம், புற்கலம், தருமம், அதருமம், ஆகாசம் இவற்றுடன் காலஞ்சேர ஆறாம். ஒன்பது : சீவம், ஆசீவம், புண்ணியம், பாவம், ஆஸரவம், சம்வரை, நிர்ச்சரை, பந்தம், மோட்சம் என்பவை.

( 216 )
2815 பெரிய வின்பத் திந்திரனும்
  பெட்ட செய்கைச் சிறுகுரங்கு
முரிய செய்கை வினைப்பயத்தை
  யுண்ணு மெனவே யுணர்ந்தவனை
யரிய ரென்ன மகிழாது
   மெளிய ரென்ன விகழாது
மிருசார் வினையுந் தெளிந்தாரே
  யிறைவ னூலுந் தெளிந்தாரே.

   (இ - ள்.) செய்கை உரிய வினைப்பயத்தை - தம் செயலால் தமக்கு உரியவாகிய இருவினையின் பயனை; பெரிய இன்பத்து இந்திரனும் - மிகுதியான இன்பத்தையுடைய இந்திரனும்; பெட்ட செய்கைச் சிறு குரங்கும் - விரும்பிய செய்கையுடைய சிறிய குரங்கும்; உண்ணும் எனவே உணர்ந்து - நுகரும் என்றே உணர்ந்து; அரியர் என்ன அவனை மகிழாதும் - பிறர் இந்நிலை எய்துதற்கு அரியர் என்று வியந்து இந்திரனை மகிழாமலும்; எளியர் என்ன இகழாதும் - பிறர் இந்நிலை எய்துதற்கு எளியர் என்று வெறுத்துக் குரங்கை இகழாமலும்; இருசார் வினையும் தெளிந்தாரே - நல்வினை தீவினைகளின் தன்மை இத்தன்மைத்தென்று தெளிந்தவரே; இறைவன் நூலும் தெளிந்தாரே - இறைவனுடைய பரமாகமத்தையும் தெளிந்தவராவர்.

   (வி - ம்.) பரமாகமம் : அங்காகமம் பன்னிரண்டும், பூர்வாகமம் பதினாலும், பகுசுருதியாகமம் பதினாறும் ஆகிய நாற்பத்திரண்டும்.

   இச்செய்யுட் கருத்தோடு,

   ”திறவோர்
”காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”

   எனவரும் கணியன்பூங்குன்றனார் மெய்ம்மொழி நினையற்பாலது.

( 217 )