பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1605 

   (வி - ம்.) கொதிநுனை : வினைத்தொகை. உமிழ்ந்து - உமிழ. ”காமத்தைக் கொப்புளித்துக் கொதி நுனையையுடைய அம்பைக் காமன் சொரிய” என்பர் நச்சினார்க்கினியர். பெய்து - பெய்யப்பட்டு. வாட்ட - வாட்டுதற்கு. விதியினாலே முலை தாரொடு மிடைந்த என்க.

( 240 )
2839 இமைத்தநுங் கண்க ளென்னை
  யிகழ்ந்தனி ரென்று சீற
வமைத்துநின் னழகு கோல
  மாரவுண் டறுக்க லாற்றா
திமைத்தன வஞ்சி யென்ன
  விளையவள் சிலம்பிற் குஞ்சி
நமைத்தபூந் தாமந் தோய
  நகைமுக விருந்து பெற்றான்.

   (இ - ள்.) நும் கண்கள் இமைத்த - உம் விழிகள் இமைத்தன; எம்மை இகழ்ந்தனிர் - (ஆகையால்) நீர் எம்மைப் பழித்தீர்; என்று சீற - என்று அவள் சினந்துரைக்க ; வஞ்சி - வஞ்சிக்கொடி போல்வாளே!; நின் அழகுகோலம் ஆர வுண்டு அமைத்து - நின் அழகையும் ஒப்பனையையும் நிறையப் பருகி அமைத்துக்கொண்டு; அறுக்கல் ஆற்றாது இமைத்தன என்ன - நீக்கமாட்டாமல் இமைத்தனகாண் என்று (இளையவன்) கூறி; இளையவள் சிலம்பில் குஞ்சி நமைத்த பூந்தாமம் தோய - அவள் சிலம்பிலே தன் குஞ்சியிற் சூட்டிய மலர்மாலை படும்படி வணங்கலாலே; நகைமுக விருந்து பெற்றான் - அவளது நகைமுகமாகிய விருந்தைப் பெற்றான்.

   (வி - ம்.) 'அமைத்து' என்பதற்குப் 'பொறுத்து' என்ற பொருள் கூறி, 'தாமந் தோய அமைத்து' என்றும். 'வஞ்சி' என்பதனை 'அஞ்சி' எனப் பிரித்துச் 'சீற' என்பதற்குப் பின், 'அவன் அஞ்சி, என்றும் கொண்டு கூட்டுவர் நச்சினார்க்கினியர், 'என்று கூற' எனவும் பாடம்.

( 241 )
2840 இன்னகி லாவி விம்மு
  மெழுநிலை மாடஞ் சோ்ந்தும்
பொன்மலர்க் காவு புக்கும்
  புரிமணி வீணை யோர்த்து
நன்மலர் நான வாவி
  நீரணி நயந்துஞ் செல்வத்
தொன்னலம் பருகிக் காமத்
  தொங்கலாற் பிணிக்கப் பட்டார்.