பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1609 

   (இ - ள்.) இது உள் பொருள் என உணர்தல் ஞானம் ஆம் - (பொருள்களுள்) இது உண்மைப் பொருள் என உணர்தல் ஞானம் எனப்படும்; அப்பொருள் தௌ்ளிதின் தெளிதல் காட்சி ஆம் - அப் பொருளின் தன்மை இது எனத் தெளிந்திடுதல் காட்சி யெனப்படும்; இருமையும் விள் அற விளங்க - அந்த இரண்டினையும் நீக்கம் அற விளங்கும்படி; தன் உளே ஒள்ளிதின் தரித்தலை ஒழுக்கம் என்ப - தன் மனத்திலே சிறப்புற நிலை பெறுத்தலை ஒழுக்கம் என்று அறிஞர் கூறுவர்.

   (வி - ம்.) ஐ, என்ப : இரண்டினையும் அசை என்பர் நச்சினார்க்கினியர்.

   இச்செய்யுட் கருத்தோடு,

”எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” (423)
”பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு” (351)
எனவரும் திருக்குறள்கள் நினைக்கற்பாலன.

   ஞானம் காட்சி ஒழுக்கம் எனுமிவற்றை இரத்தினத்திரயம், மும்மணிகள் என்ப.

( 247 )
2846 கூடிய மும்மையுஞ் சுடர்ந்த கொந்தழ
னீடிய வினைமர நிரைத்துச் சுட்டிட
வீடெனப் படும்வினை விடுதல் பெற்ற தங்
காடெழிற் றோளினா யநந்த நான்மையே.

   (இ - ள்.) ஆடு எழில் தோளினாய் - வெற்றியும் அழகுமுடைய தோளுடையாய்!; கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்து அழல் - இவ்வாறு கூடிய மூன்று தன்மையும் நின்று எரிந்த மிகு நெருப்பு; நீடிய வினைமரம் நிரைத்துச் சுட்டிட - மிக வளர்ந்த இருவினையாகிய மரத்தினை ஒழுங்குறச் சுட்டுப்போட; வினைவிடுதல் வீடு எனப்படும் - அவ்விருவினையும் (தாம் நெடுங்காலம் பழகிய உயிர்க்கிழவனைக்) கைவிடுதல் வீடு எனப்படும்; அங்குப் பெற்றது அநந்த நான்மை - அங்குப் பெற்ற பயன் அநந்த சதுட்டயங்கள்.

   (வி - ம்.) அவை : அநந்த ஞானம், அநந்த தரிசனம், அநந்த வீரியம், அநந்த சுகம். (கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம்.)

( 248 )
2847 கடையிலா வறிவொடு காட்சி வீரியங்
கிடையிலா வின்பமுங் கிளந்த வல்லவு
முடையதங் குணங்களோ டோங்கி விண்டொழ
வடைதலான் மேலுல கறியப் பட்டதே.