பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1639 

2900 கொடியணி யலங்கன் மார்பிற் குங்குமக் குன்ற மன்னா
னடிபணிந் தருளு வாழி யரசரு ளரச வென்னப்
படுசின வெகுளி நாகப் பைத்தலை பனித்து மாழ்க
விடியுமிழ் முரச நாண வின்னண மியம்பி னானே.

   (இ - ள்.) கொடி அணி அலங்கல் மார்பின் குங்குமக் குன்றம் அன்னான் - ஒழுங்குற அணிந்த மாலையையுடைய மார்பனாகிய குங்குமக் குன்றம் போன்ற சீவகனின்; அடி பணிந்து - அடியை வணங்கி; அரசருள் அரச! வாழி அருள் என்ன - அரசர்க்கரசே! வாழ்க! நினைத்ததை அருள்க என்ன; படுசின வெகுளி நாகப் பைந்தலை பனித்து மாழ்க உமிழ் இடிமுரசம் நாண - உண்டாகும் மிகு சீற்றத்தையுடைய நாகத்தின் படமுடைய தலை நடுங்கி மயங்க இடிக்கும் இடியோசையைப் பிறப்பிக்கும் முரசம் நாணுமாறு; இன்னணம் இயம்பினான் - இவ்வாறு கூறினான்.

   (வி - ம்.) ‘கொடி அணி மார்பு‘ என இயைத்து, வெற்றிக் கொடி எடுத்தற்குக் காரணமான மார்பு எனலுமாம். அருளு : உ : சாரியை. வாழி : அசை எனலுமாம்.

( 302 )
2901 ஊனுடைக் கோட்டு நாகான்
  சுரிமுக வேற்றை யூர்ந்து
தேனுடைக் குவளைச் செங்கேழ்
  நாகிளந் தேரை புல்லிக்
கானுடைக் கழனிச் செந்நெற்
  கதிரணைத் துஞ்சு நாடு
வேன்மிடை தானைத் தாயம்
  வீற்றிருந் தாண்மோ வென்றான்.

   (இ - ள்.) ஊனுடைக் கோட்டுச் சுரிமுக நாகு - ஊனையுடைய கோட்டினையும் சுரிந்த முகத்தினையும் உடைய நத்தை; ஆன் ஏற்றைச் செங்கேழ் நாகு ஊர்ந்து - (வரம்பிலே துயின்ற) ஆவின் ஏற்றையும் சிவந்த நிறம் பொருந்திய நாகினையும் ஏறி; இளந்தேரை புல்லி - இளந்தேரையையும் தழுவி; தேனுடைக் குவளைக் கழனி - தேன் பொருந்திய குவளைக் கழனியிலே; கானுடைச் செந்நெற் கதிர் அணைத் துஞ்சும் நாடு - காட்டின் தன்மையை உடைய செந்நெற் கதிராகிய அணையிலே துயிலும் நாட்டையும்; வேல் மிடைத் தானைத் தாயம் - வேல் நெருங்கிய படையாகிய தாயத்தையும்; வீற்றிருந்து ஆள் என்றான் - வருத்தமின்றி ஆள்வாயாக என்று கூறினான்.