பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1667 

   (இ - ள்.) முட்டு வட்டு அனைய கோல - அரக்குவட்டுப் போன்றனவாய்த் திரண்ட; அம் முத்து உலாய்க் கிடந்து மின்ன - அழகிய முத்துக்கள் ஒன்றோடொன்று கலந்து மின்ன; மட்டு விட்டு அலர்ந்த கோதை மதுவொடு மயங்கி - தேன் துளித்து மலர்ந்த எம் மார்பின் கோதை (நின்னிடத்துக்கிடந்த மாலையின்) மதுவோடே மயங்கி; நாளும் ஒட்டியிட்டு உறைய எங்கட்கு உயர் அணையாய மார்பம்! - நாடோறும் ஒன்றுபட்டுறையும்படி எங்கட்கு உயர் அணையாக இருந்த மார்பே!; நட்பு விட்டு ஒழியும் ஆயின் - (நீ எம்மோடு கொண்ட) நட்பு எம்மைக் கைவிட்டு நீங்கின்; நன்மையார் கண்ணது! - மற்று நற்பண்பு யாரிடத்தே உள்ளது? (கூறாய்)

   (வி - ம்.) மூட்டு - அரக்கு. கோல் அம்முத்து எனக் கண்ணழித்துக் கொள்க. கோல் - திரட்சி. மட்டு - தேன். ஒட்டியிட்டு : ஒரு சொல். மார்பம் : விளி. நீ எம்பாற்கொண்ட நட்பு எம்மை விட்டொழியுமாயின் என்க.

( 352 )
2951 மாக்கவின் வளரத் தீண்டி
  மணிநகை நக்கு நாளும்
பூக்கவி னார்ந்த பைந்தார்
  புனைமதுத் தேனொ டேந்தித்
தாக்கியெம் முலைக டம்மை
  நெருங்கினாய் தரணி மன்னி
னீக்கிநீ யெம்மை நோக்காய்
  நீத்தியோ நீயு மென்பார்.

   (இ - ள்.) மாக்கவின் வளரத் தீண்டி - எம்முடைய பேரழகு மிகும்படி தீண்டி; மணிநகை நக்கு - மணியின் ஒளியை (நீ) தோற்றுவித்து; பூக்கவின் ஆர்ந்த பைந்தார் - பிற மலர்களின் அழகு நிறைந்த புதிய கழுநீர் மலரே!; நாளும் புனைமதுத்தேனொடு ஏந்தித் தாக்கி - எப்போதும் அணிந்த மதுவை வண்டுகளுடன் ஏந்தித் தாக்கி; நீ எம் முலைகள் தம்மை நெருக்கினாய் - நீ எம் முலைகளை நெருங்கினாய்!; தரணி மன்னின் எம்மை நீக்கி நோக்காய் - உலக வேந்துபோல எம்மை விலக்கிப் பாதுகாவாமல். நீயும் நீத்தியோ என்பார் - நீயும் கைவிட்டு நின்றாயோ என்பார்;

   (வி - ம்.) மாக்கவின் - பேரழகு. நக்கு - தோற்றுவித்து. தேன் - வண்டு. மன் - மன்னன் : சீவகன். நீயும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. செங்கழுநீர் மாலை மார்பகத்துக் தங்கி ஒட்டி ஒன்றாய் விடாது கூடி இருந்தது. இப்பொழுது நீங்குவதுபற்றி இங்ஙனம் கூறப்பட்டது.

( 353 )